வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்படலாம் என அச்சம்... 24 மணிநேரமும் கண்காணிக்கும் எதிர்க்கட்சிகள்!
Recommended Video
டெல்லி: வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி நடப்பதை தடுப்பதற்காக, எதிர்க்கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், பிரதிநிதிகளும் இரவு பகல் பாராமல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறைகள் கடுமையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களாக வாக்கு எந்திரங்கள் மாற்றப்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியானது. இந்த வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, எதிர்க்கட்சி வேட்பாளர்களையும், அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் அதிர்ச்சியடைய வைத்தது.
மோசடி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று தேர்தல் ஆணையமும், பாஜகவும் மாறி மாறி கூறியும், அதனை நம்புவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை.
வாக்குப் பதிவு எந்திரங்கள் மாற்றப்படலாம் என்ற அச்சம் காரணமாக, வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள கட்டங்களிலேயை எதிர்க்கட்சி பிரதிநிதிகள் முகாமிட்டு 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர்.
எதிர்க்கட்சி வேட்பாளர்களும், தலைவர்களும் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக, காங்கிரஸ் தலைவர்கள் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை நேரில் சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதேபோன்று, நாட்டின் பல பகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறையை சுற்றிலும் காங்கிரஸ் கட்சியினர் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர். வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறையை சிசிடிவி கேமரா மூலமாக கண்காணிப்பு பகுதியில் இருந்து பாதுகாப்புப் படையினருடன் அமர்ந்து கட்சிப் பிரதிநிதிகள் பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்படுவது குறித்த புகார் பூதாகரமாகி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, வாக்குப்பதிவு எந்திரம் குறித்த புகார்களை கையாள்வதற்காக தனி கட்டுப்பாட்டு மையத்தையும் தேர்தல் ஆணையும் அமைத்துள்ளது.
மிக உயரிய பாதுகாப்பு முறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சீல் வைக்கப்பட்ட அறையை அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் திறப்பதற்கான நடைமுறைகள் பின்பற்றப்படும். எனவே, மோசடி நடப்பதற்கு வாய்ப்புகளே இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.