ஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு? ஜார்க்கண்ட்டில் தனியே தேர்தல்?
டெல்லி: ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கக் கூடும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு மட்டும் தனியே சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளின் பதவிக் காலம் முடிவடைகிறது. இதையடுத்து இம்மாநிலங்களில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலமானது மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளைக் கொண்டது. அதனால் அங்கு இன்னமும் தேர்தல் ஏற்பாடுகள் முடிவடையவில்லை. இதையடுத்து முதல் கட்டமாக ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டசபைகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளன.
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் இன்று இந்த தேதிகளை அறிவிப்பார் என கூறப்படுகிறது. இன்று அறிவிப்பு வெளியான உடன் இம்மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும்.
ஹரியானா
ஹரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆங்கி ஆட்சி அமைக்க 45 இடங்கள் தேவை. 2014 சட்டசபை தேர்தலில் பாஜக 47 இடங்களில் வென்று முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் இந்திய தேசிய லோக்தள் கட்சி 7 இடங்களிலும் வென்றன.
இம்முறையும் சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைக்க பாஜக பகீரத பிரயத்தனம் மேற்கொள்கிறது. கடந்த காலங்களில் தலித்துகளின் வாக்கு வங்கியை அறுவடை செய்து வந்தது பகுஜன் சமாஜ். ஆனால் அக்கட்சியின் வாக்கு வங்கி தேர்தலுக்கு தேர்தல் சரிவை சந்தித்தது.
இதனால் இம்மாநிலத்தில் கூட்டணி அமைக்க பகுஜன் சமாஜ் முயற்சித்தது. ஆனால் அது கை கொடுக்கவில்லை என்பதால் தனித்தே போட்டியிடுகிறது. இதை தங்களுக்கு சாதகமாக பார்க்கிறது பாஜக. தாழ்த்தப்பட்ட, பழங்குடி தொகுதிகள் அனைத்தையும் வென்றுவிடுவோம் என்கிற நம்பிக்கையில் உள்ளது பாஜக.
மகாராஷ்டிரா
288 தொகுதிகளைக் கொண்டது மகாராஷ்டிரா சட்டசபை. இங்கு பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை. இம்மாநிலத்தில் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. தற்போதைய சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் தலா 144 இடங்களில் போட்டியிடுவது என முன்னர் தீர்மானித்திருந்தன.
தற்போது சிவசேனாவுக்கு 120 தொகுதிகளுக்கு மேல் கிடையாது என திட்டவட்டமாக பாஜக கூறிவருகிறது. இதனால் சிவசேனா- பாஜக கூட்டணி முறியும் நிலையில் இருக்கிறது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பலர் பாஜக, சிவசேனாவுக்கு கட்சி தாவியிருப்பதால் அக்கட்சிகளுக்கு பெரும் சவாலாகவே இத்தேர்தல் இருக்கும்.