தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜூலை 18-ல் தேர்தல்!
சென்னை: தமிழகத்தில் இருந்து 6 ராஜ்யசபா எம்.பிக்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18-ந் தேதி நடைபெறுகிறது.
நாடாளுமன்றத்தின் மேலவை எனப்படும் ராஜ்யசபாவுக்கு ஒவ்வொரு மாநிலங்களிலிருந்து அந்த மாநிலத்தில் உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்தந்த மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் முடியும் போது இந்த தேர்தல் நடைபெறும்.
6 பேர் பதவிக்காலம்
அதன்படி தமிழகத்திலிருந்து அதிமுக சார்பில் மைத்ரேயன், லட்சுமணன், ரத்தினவேல், அர்ஜூனன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி ராஜா, திமுக சார்பில் கனிமொழி ஆகியோர் 2013-ஆம் ஆண்டு மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டனர்.
தேர்தல் ஆணையம்
இந்த நிலையில் இவர்களது பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தமிழகத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-இல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை
இதற்கான வேட்புமனுதாக்கல் ஜூலை 1 தொடங்கி முதல் ஜூலை 8-ஆம் தேதி முடிவடைகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற ஜூலை 11-ஆம் தேதி கடைசி தேதியாகும். ஜூலை 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் 4 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கையும் அன்றைய தினமே நடைபெறுகிறது.
அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தலா 3
ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்களின் தேவைப்படுகிறது. அந்த வகையில் அதிமுக சார்பில் 3 உறுப்பினர்களும் திமுக சார்பில் 3 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படுவர்.