கொரோனா பொருளாதார பாதிப்பை சமாளிக்க.. வேகமாக ரெடியாகும் பேக்கேஜ்.. நிர்மலா அறிவிப்பு
டெல்லி: பொருளாதார பேக்கேஜ் தயாரிக்கப்படுகிறது, விரைவில் அறிவிப்பு வரும் என்று, நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பு, பொருளாதார தாக்கத்தை சமாளிப்பதற்கான அறிவிப்புகளை, இன்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வருமான வரி தாக்கலுக்கான கால நீட்டிப்பு உள்ளிட்டவை இதில் அடங்கும். வங்கியில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை, 3 மாதங்களுக்கு எந்த ஒரு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தாலும் கூடுதல் கட்டணம் கிடையாது போன்ற அறிவிப்புகளும் இதில் உள்ளது.
பின்னர் நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது: வங்கியில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காவிட்டால் அடுத்த 3 மாதங்களுக்கு அபராதம் விதிக்கப்படாது. அதற்கு பிறகு எப்படி நிலைமை போகிறது என பார்க்கலாம். பங்குச் சந்தை நிலவரங்கள் குறித்து, தினமும் 3 முறை ஆய்வு செய்து வருகிறோம்.
கட்டுப்பாட்டாளர்கள், ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் அனைத்தும் பங்குச் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஏற்ற இறக்கம் ஆகியவற்றைக் கண்காணிக்க ஒன்றிணைந்து செயல்படுகின்றன. செபி சில வழிகாட்டுதல்களைக் கொண்டு வந்து அதன் நிலைப்பாட்டைக் கூறியுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வங்கியில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை.. எந்த வங்கி ஏடிஎம்மிலும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம்: நிர்மலா
கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, சமீபத்தில் தொலைக்காட்சியில் உரையாற்றியபோது பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும் இதை சரி செய்வதற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பொருளாதார பணி குழு அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இந்த குழு சம்பந்தப்பட்ட துறை துறைகளுடன் ஆலோசனை நடத்தி உரிய மீட்பு நடவடிக்கைகளை எடுக்கும் என்று மோடி கூறியிருந்தார்.
இதுகுறித்து நிர்மலா சீதாராமனிடம் கேட்டபோது, பொருளாதார பேக்கேஜ் தயாரிக்கப்படுகிறது, விரைவில் அறிவிப்பு வரும், தாமதிக்க மாட்டோம். இது முன்னெப்போதும் இல்லாத அசாதாரண நிலை. எனவே, மிக அதிகமாக ஆலோசிக்க வேண்டியுள்ளது, என்று தெரிவித்தார்.