கொரோனா பாதிப்பை சமாளிக்க.. ஏழைகளுக்கு அரிசி, பருப்பு இலவசம்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
டெல்லி: கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது ஏழைகளுக்கான பொருளாதார பேக்கேஜ் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதாக அவர் அறிவித்தார்.
Recommended Video
மார்ச் 19ஆம் தேதி தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதாரத்தின் மீது கொரோனா வைரஸ் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதை சரிசெய்வதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பொருளாதார பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்பு நிருபர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், எந்த ஒரு வங்கி ஏடிஎம் மையத்திலும் கட்டணமின்றி பணம் எடுத்துக்கொள்ளலாம். வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது என்பது போன்ற அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டார்.
பொருளாதார பேக்கேஜ் பற்றி எப்போது அறிவிக்கப்படும் என்ற நிருபர்களின் கேள்விக்கு, விரைவில் அது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்றார். இந்த நிலையில் இன்று மதியம் 1.15 மணியளவில் டெல்லியில் நிருபர்களை சந்தித்தார் நிர்மலா சீதாராமன்.
அப்போது அவர் கூறுகையில், லாக்டவுன் அறிவித்து 2 நாட்கள்தான் ஆகியுள்ளது. எனவே, இதனால் நேரடியாக பாதிக்கப்படும் ஏழைகளுக்கு நிதி பேக்கேஜ் அளிக்க முடிவு செய்துள்ளோம். ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ளது இந்த பேக்கேஜ். ஒருவர் கூட பசியோடு இருக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இந்த பேக்கேஜ் பற்றி விரிவாக நான் விளக்கம் அளிக்கிறேன்.
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ், மாதத்துக்கு 5 கிலோ அரிசி மற்றும் 5 கிலோ கோதுமை ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அரிசி அல்லது கோதுமை என அவர்கள் எதை வாங்கினாலும், கூடுதலாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை (வாங்குவோரின் விருப்பம்) இலவசமாக வழங்கப்படும்.
ஒவ்வொரு பிராந்தியமும் ஒவ்வொரு வகை பருப்புகளை விரும்புபவர்கள். அவர்கள் விரும்பும் பருப்புகளை ஒரு குடும்பத்திற்கு தலா ஒரு கிலோ 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த திட்டம் தொடரும்.