ஜிடிபி சரிவு- மோடி அரசுக்கு அவமானம்... தவறுகளை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள்... ப. சிதம்பரம் 'டோஸ்'
டெல்லி: நாட்டின் ஜிடிபி 23.9% சரிந்திருப்பது என்பது மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசுக்கான அவமானம்; இந்த அரசு தமது தவறுகளை ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
ஜிடிபி விகிதம் 23.9% சரிவை சந்தித்திருப்பது தேசம் முழுவதும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்து:
நடப்பாண்டின் முதல் காலாண்டு ஜி.டி.பி. விகிதம் 23.9 % ஆக சரிந்திருப்பது என்பது மிகப் பெரிய பொருளாதார சீர்குலைவு. மக்களைப் பற்றி சிந்திக்காத, அக்கறையற்ற அரசால் இந்த தேசம் மிகப் பெரிய விலையை கொடுத்து வருகிறது.
நாட்டில் விவசாயத்துறை, வனத்துறை மற்றும் மீன்பிடித்துறை மட்டுமே 3.4% வளர்ச்சியை சந்தித்துள்ளது. ஆனால் நாட்டின் நிதி அமைச்சரோ, பொருளாதார சரிவுக்கு கடவுள்தான் காரணம் என்கிறார். விவசாயிகளுக்கு நன்றி செலுத்த வேண்டும். கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் விவசாயிகள்தான்.
இந்த மோசமான ஜிடிபி வீழ்ச்சியானது எங்களுக்கு ஆச்சரியமானது அல்ல. இது மத்திய அரசுக்குத்தான் ஆச்சரியமானதாக இருக்கலாம். தொடக்கம் முதலே பொருளாதார வீழ்ச்சி குறித்து காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்து வந்தது. ஆனால் மத்திய அரசுதான் கண்டு கொள்ளவில்லை.
நாடு முடங்கினால்... ஜி.டி.பி.சரியத்தான் செய்யும்... இதில் என்ன வியப்பு... பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன்
பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமது தவறுகளை ஒப்புக் கொள்ளப்போவதும் இல்லை. இத்தகைய மோசமான வீழ்ச்சியை அவமானமாக உணரப்போவதும் இல்லை. அண்மையில் ரிசர்வ் வங்கி அறிக்கை கூட பொருளாதார சரிவை கோடிட்டு காட்டியிருந்தது. இதனால்தான் தொடக்கம் முதலே இத்தகைய வீழ்ச்சியைத் தடுக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என எச்சரித்தோம்; வலியுறுத்தினோம்.
Recommended Video
ஆனால் எங்களது வேண்டுகோள்கள் காதுகேளாதவர்களின் காதுகளில் விழுந்த கதையாகிவிட்டது. ஒட்டுமொத்த தேசமுமே கடினமான விலையை கொடுத்திருக்கிறது. இவ்வாறு ப. சிதம்பரம் கூறியுள்ளார்.