ஆதாரங்களை அமலாக்கத்துறை மீடியாக்களில் கசிய விட்டுடுச்சு.. கபில் சிபல் பரபரப்பு புகார்
சென்னை: ப சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் இன்று தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தை அமலாக்கத்துறை மீடியாக்களில் கசிய விட்டுள்ளதாக வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் குற்றம்சாட்டி உள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப சிதம்பரத்தின் ஜாமின் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று பட்டியலிடப்படவில்லை. இதனிடையே ப சிதம்பரத்தை பண மோசடி வழக்கில் கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டு இருந்தது.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை ப சிதம்பரம் அணுகிய நிலையில் அமலாக்கத்துறை திங்கள் வரை கைது செய்ய தடை விதித்தது. மேலும் பதில அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி அமலாக்கத்துறை பிரமாண பத்திரத்தை இன்று தாக்கல் செய்தது.
இதுதொடர்பான மனுவில் "ப சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்ததுடன், நிதி புலனாய்வு பிரிவு வழங்கியுள்ள தகவலின்படி, ப சிதம்பரம் மற்றும் அவரோடு சேர்ந்து குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு 12 வெளிநாடுகளில் சொத்துக்களும் வங்கி கணக்குகளும் உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தது. மேலும் நிதி பண பரிவர்த்தனைகள் தொடர்பாக ப சிதம்பரம் அவருடன் வழக்கில் தொடர்புடையோர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்" என கூறியிருந்தது.
இதையடுத்து ப சிதம்பரம் சார்பில் ஆஜராகி பதில் வாதம் செய்ய கபில் சிபல், ஆதாரங்களை அமலாக்கத்துறை சீலிடப்பட்ட நிலையில் பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்துள்ளது. என்ன ஆதாரம் என்றே தெரியாமல் நான் எப்படி வாதாட முடியும். பிரமாண பத்திரத்தை அமலாக்கத்துறை மீடியாக்களில் கசிய விட்டுள்ளது என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா நாங்கள் பிரமாண பத்திரத்தை கசிய விடவில்லை என்றார். நீங்கள் இங்கு அரசியல் பேச வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.