குஜராத் நிறுவனம்- ரூ 14,500 கோடி வங்கி கடன் மோசடி- காங். அகமதுபடேலிடம் 8 மணிநேரம் தொடர் விசாரணை
டெல்லி: ரூ14,500 கோடி வங்கி கடன் மோசடி தொடர்பாக காங்கிரஸ் கட்சி பொருளாளரான அகமது படேலிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 8 மணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
குஜராத்தின் வதோதராவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஸ்டெர்லிங் பயோடெக். இந்த நிறுவனம் வங்கிகளில் இதுவரை ரூ14,000 கோடி கடன் பெற்றுள்ளது.
ஆனால் வங்கி கடன்களை ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் திருப்பி செலுத்தவில்லை என்பது புகார். இந்த நிறுவனத்தை நடத்தி வந்த நிதின் சந்தேசரா, சேத்தன் சந்தேசரா, தீப்தி சந்தேசரா மூவரும் தற்போது நைஜீரியாவுக்கு தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர். அவர்களை நாடு கடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் 24 மணிநேரத்தில் 14,821 பேருக்கு கொரோனா; 445 பேர் மரணம்; 2-வது இடத்தில் டெல்லி
தலைவர்களின் தொடர்பு அம்பலம்
இதனிடையே ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவன ஊழியர்களிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது தலைமறைவாக உள்ள சேத்தன் சந்தேசராவுக்கு மிக நெருக்கமான சுனில் யாதவிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. தலைமறைவாக உள்ள சந்தேசரா சகோதரர்களுக்கும் பல அரசியல் கட்சித் தலைவர்களின் வாரிசுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததும் அம்பலமானது.
விசாரணையில் அகமது படேல் குடும்பம்
குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக உள்ள அகமது படேலின் மகன் பைசல், மருமகன் இர்பான் சித்திக் ஆகியோர் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் சிக்கினர். இதனால் அவர்களிடம் கடந்த ஆண்டு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சோனியா, ராகுல் ஆலோசகர்
இந்த நிலையில் ஸ்டெர்லிங் பயோடெக் வழக்கில் அகமது படேலையும் விசாரிக்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முடிவு செய்தனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சோனியா, ராகுல் காந்தியின் பிரதான ஆலோசகர் அகமது படேல்தான். இதனால் அகமது படேலை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்தது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்காக அகமது படேலுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.
8 மணிநேர கிடுக்குப் பிடி விசாரணை
ஆனால் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் தம்மால் விசாரணைக்கு வர இயலாது என அகமது படேல் மறுத்துவந்தார். இதனால் நேற்று டெல்லியில் உள்ள அகமது படேலின் வீட்டுக்கே சென்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 8 மணிநேரம் நடைபெற்றது. அப்போது அகமது படேல் தெரிவித்த பதில்கள் அனைத்தும் வாக்குமூலங்களாகப் பதிவு செய்யப்பட்டன.
வந்தது மோடியின் நண்பர்கள்
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து கூறிய அகமது படேல், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரது நண்பர்கள் என்னிடம் விசாரணை நடத்த வந்தனர். அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நான் பதில் அளித்துவிட்டேன். எல்லையில் சீனா நமது நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் போது அதை திசை திருப்ப அரசு அதிகாரிகளை மத்திய அரசு இப்படி தவறாக பயன்படுத்துவது வருத்தம் தருகிறது என்றார். அகமது படேலிடம் வரும் செவ்வாய்க்கிழமையன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.