ஏர்பஸ் முறைகேடு: ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்- வரும் 23-ல் ஆஜராக உத்தரவு!
டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஏர்பஸ் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அதிக அளவில் ஏர்பஸ் விமானங்கள் வாங்கப்பட்டன என்பது புகார். இந்த செலவுகளால்தான் ஏர் இந்தியா நிறுவனம் நட்டம் அடைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வரும் 23-ந் தேதி டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இதே வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் படேலையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர். விமான போக்குவரத்து லாபியிஸ்டான கைது செய்யப்பட்ட தீபக் தல்வாருடன் பிரபுல் படேல் நெருக்கமான தொடர்பில் இருந்தார்; இதன் மூலம் தல்வார் ரூ272 கோடி ஆதாயம் அடைந்தார் என்கிறது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை.
ஏற்கனவே ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு, ஏர்செல் மேக்சிஸ் வழக்குகளில் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 23-ந் தேதி வரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தற்போது ஏர்பஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 23-ந் தேதியே விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.