அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. அரசு மற்றும் அரசியல் குறித்து ஒன்றைரை மணி நேரம் பேச்சு..!
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்றிரவு டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
அப்போது அவருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் உடனிருந்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அரசு நிர்வாகம் மற்றும் அரசியல் குறித்து விரிவாக பேசப்பட்டிருக்கிறது.
மேலும், சசிகலா விவகாரம் உட்பட தேர்தல் கூட்டணி, பிரச்சார வியூகங்கள் குறித்தெல்லாம் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா கால நிர்வாகம், பருவமழை தவறி பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எடுத்துரைத்த முதலமைச்சர் அரசியல் குறித்தும் ஆலோசித்திருக்கிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி விவகாரம், பிரச்சார செயல் திட்டங்கள், குறித்தும் இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்டிருக்கிறது. மேலும், சசிகலா விடுதலை விவகாரம் குறித்தும் பேச்சுவார்த்தை நிகழ்ந்திருக்கும் என டெல்லியில் உள்ள நமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசு மீது தமிழகத்தில் இவ்வளவு அதிருப்தியா..? 44% பேர் பிடிக்கவில்லை எனக் கூறி அதிரடி..!
இதனிடையே இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு கூடுதல் நிதி கோர இருப்பதுடன் ஜெயலலிதா நினைவிடம் திறப்புவிழாவுக்கான அழைப்பிதழையும் வழங்குவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வழக்கமாக டெல்லி சென்றால் தனியாக செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு தளவாய் சுந்தரத்தை உடன் வைத்துக் கொள்வார். இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமாரை சென்னையில் இருந்தே உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். சசிகலாவுக்கு எதிராக தொடர்ந்து பேட்டி கொடுத்து வருவதுடன் சசிகலா எதிர்ப்பில் ஜெயக்குமார் உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்ந சூழலில் அவரும் முதல்வருடன் டெல்லி சென்றிருப்பது அரசியல் ரீதியாக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.