ஒரே முட்டுக்கட்டை.. ஓபிஎஸ்சுக்கு எதிராக இடைக்கால உத்தரவு வேண்டும்.. எடப்பாடி உச்சநீதிமன்றத்தில் மனு
டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வம் தரப்பு வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை கட்டுப்படுத்தும் வகையிலும் இடைக்கால உத்தரவு கோரி எடப்பாடி பழனிச்சாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என இருதலைமை இருந்தது. இந்நிலையில் தான் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
கடந்த ஜூன் மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுக்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என அறிவித்தது.
கனமழையால் நிரம்பும் ஏரிகள்..செம்பரம்பாக்கம், புழல்,பூண்டி ஏரிகளில் இருந்து இன்று உபரி நீர் திறப்பு
சென்னை உயர்நீதிமன்ற வழக்கு
தொடர்ந்து தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது. நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தி அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீது விசாரித்த நீதிபதிகள் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தனர். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக அமைந்தது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இதையடுத்து அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 6ம் தேதி வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
6ம் தேதி நடந்த வாதம்
கடந்த 6ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த விசாரணையின்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது ‛‛அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதனால் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். பொதுக்குழு செல்லும் என உத்தரவிட வேண்டும்'' என வாதிடப்பட்டது.
இடைக்கால உத்தரவுகோரல்
மேலும், ‛‛ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து என்பது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுவுக்கு தேவையில்லை. ஆனால் தேர்தல் ஆணையத்தின் செயல்பட்டால் கட்சி செயல்பட முடியாத நிலையில் உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியிட முடியாத சூழல் உள்ளது. இதனால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என கோரிக்கை வைக்கப்பட்டது.
கூடுதல் மனுத்தாக்கல்
இதை கேட்ட உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தகவல் ஏதேனும் தெரிவிக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பியது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தனியாக கூடுதல் மனு தாக்கல் செய்ய வேண்டும். என எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் கூறப்பட்டுள்ள வாதத்தை ஏற்ககூடாது என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மனுவில் இருப்பது என்ன?
இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல் மனுவில், ‛‛உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனுக்களை காரணம் காட்டி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்தகூடாது என ஓ பன்னீர் செல்வம் தரப்பு கூறுவது சட்டப்படி ஏற்புடையதல்ல. இந்த நிலுவையில் உள்ள வழக்குகளை சுட்டிக்காட்டி யாரையும் செயல்படவிடாமல் ஓ பன்னீர் செல்வம் தடுத்து வருகிறார். குறிப்பாக சட்டசபை சபாநாயகர், தேர்தல் ஆணையத்துக்கு கடிதங்களை ஓ பன்னீர் செல்வம் எழுதி கட்சி செயல்பாட்டை தடுத்து வருகிறார். மேலும் ஓ பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை. இருப்பினும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டுக்கு ஓ பன்னீர் செல்வம் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இந்த விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும். இதுதொடர்பாக இடைக்கால உத்தரவு போடப்பட வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
ஓ பன்னீர் செல்வம் பதில் மனு
தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக ஓ பன்னீர் செல்வம் தரப்பில் விரைவில் பதில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையடுத்து வரும் திங்கட்கிழமை எடப்பாடி பழனிச்சாமியின் கூடுதல் மனு மற்றும் ஓ பன்னீர் செல்வத்தின் பதில் மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விவகாரம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.