30 சீட்தான் தர முடியும்.. அமித்ஷாவிடம் சப்ஜாடாக சொன்ன எடப்பாடியார்.. பாஜக அப்செட்!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சிக்கு அதிகபட்சம் 30 தொகுதிகள்தான் தர முடியும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரை சந்திக்க நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் முதலில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. அரசு மற்றும் அரசியல் குறித்து ஒன்றைரை மணி நேரம் பேச்சு..!
அதிமுக முதல்வர் வேட்பாளர்
இந்த சந்திப்பின் போது தமிழக சட்டசபை தேர்தல் நிலவரம், தொகுதி பங்கீடு, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாம். முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜக தலைவர்கள் முரண்பட்ட கருத்துகளை தெரிவிப்பது கூட்டணிக்கு பின்னடைவாக இருக்கும் என முதல்வர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டதாம்.
அதிகபட்சம் 30 தொகுதிகள்
தொகுதி பங்கீட்டைப் பொறுத்தவரையில் பாஜக கேட்கின்றன 60 தொகுதிகளை நிச்சயம் தர இயலாது என்பதுதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பின் பதிலாம். அதிகபட்சமாக 30 தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்க முடியும்; அப்படியே 30 தொகுதிகள் ஒதுக்கினாலும் பாமக, தேமுதிக கட்சிகளும் கணிசமான இடங்களைக் கேட்க வாய்ப்பிருக்கிறது; அதனால் அதிமுக குறைவான தொகுதிகளில் போட்டியிடும் நிலை உருவாகும் என்கிற கவலையும் தெரிவிக்கப்பட்டதாம்.
சசிகலாவுக்கு எதிர்ப்பு
அதேபோல் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைக்கும் முயற்சிகளை எடுக்க வேண்டாம் எனவும் முதல்வர் தரப்பில் கூறப்பட்டதாம். ஆனால் அதிமுக-அமமுக இணந்தால்தான் வாக்கு வங்கியில் சேதாரம் இருக்காது என அமித்ஷா தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டதாம். இருந்தபோதும் தங்களது எதிர்கால இருப்புக்கு சசிகலா ஆபத்து என்பதால் இந்த முயற்சிகளை எடுக்க வேண்டாம் எனவும் சொல்லப்பட்டதாம்.
உட்கட்சி கேம்
டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்த போது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸுடன் ஆலோசனை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகின. எடப்பாடிக்கு மட்டுமே ஊடகங்கள் முக்கியத்துவம் தந்துவிடக் கூடாது என்பதற்காக ஓபிஎஸ் செய்திக்கும் முக்கியத்துவம் தர வலியுறுத்தப்பட்டதாம்.