இருண்ட உலகத்தின் ஒற்றை ஒளி.. துடித்த இதயங்களின் உயிர்த் துளி.. வந்தாச்சு கொரோனா தடுப்பூசி!
டெல்லி: கடந்த மார்ச் மாதம் வரை.. இந்தியர்கள் கொரானா வைரஸ் பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மார்ச் மாத இறுதியில், இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி அமல்படுத்திய பிறகுதான், நாம் எந்த அளவுக்கு ஒரு மோசமான வைரஸ் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறோம் என்பது மக்களுக்கு புரிந்தது.
Recommended Video
பக்கத்து தெருவில் உள்ள சொந்தக்காரரையோ, ஒரு நண்பரையோ பார்க்கச் செல்லும்போது கூட, போலீஸ் லத்தியால் அடித்து விரட்டியபோது மனது துடித்தது.
கடைக்குப் போக கூட காவல்துறையிடம் காரணம் சொல்லி விட்டு செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
அவசரத் தேவைக்கு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு போக பாஸ் கிடைக்காமல் கதறித் துடித்த மக்கள் பலர். தந்தை அல்லது தாய் இறப்பு கூட சொந்த ஊர் போக முடியாமல் சென்னை, கோவை உள்ளிட்ட எத்தனையோ நகரங்களில், மகன்கள் அல்லது மகள்கள் சிக்கி தவித்து துடித்த சம்பவங்களுக்கும் வரலாற்று துயரத்திற்கும் 2020ஆம் ஆண்டு மவுன சாட்சியாக நின்றது.
கொரானா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை குடும்பத்தாருக்கு கூட கொடுக்காமல் அரசு தகனம் செய்தது. கொரோனா தாக்கியவர்களுக்கு குடும்பத்தார்தான் இறுதி மரியாதை செலுத்த முடியவில்லை என்றால், அந்த உடல்களை இங்கு புதைக்கக் கூடாது என்று கல்லறைத் தோட்டத்தில் கூட கலாட்டாக்கள் நடந்தன. இறந்த பிறகும் நிம்மதி இல்லாமல் சுற்றித் திரிந்தன, இந்தக் கொடுமையான கொரோனாவால், தாக்கப்பட்ட உடல்கள்.
தாய்க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் பால் குடிக்கும் பச்சை குழந்தையாக இருந்தாலும், தள்ளி வைத்து விட்டு, அது ஏக்கத்தோடு அழுவதை எட்ட நின்று பார்த்து துடித்தது பெண்கள் இனம். மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல், ஒரே வீட்டுக்குள் தனித் தனி தீவாக, வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட அவலமும் நடந்தேறியது.
இத்தனை இன்னல்களுக்கும் நடுவே உலகின் மொத்த மனித குலமும் ஏங்கியது அந்த ஒற்றை ஒளிக்காக. கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி எப்போது கண்டுபிடிக்கப்படும் என்பது தான் அனைத்து உள்ளங்களின் ஒற்றைக் கேள்வியாக தொக்கி நின்றது. விஞ்ஞானிகள் ஒவ்வொருவரும் கடவுளுக்கு நிகராக மதிக்கப்பட்டு அவர்களின் பதிலுக்காக மானுட குலம் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தது.
"ரொம்ப கஷ்டப்பட்டோம்.." கொரோனா தடுப்பூசி பணியை துவங்கியபோது.. நாக்கு தழுதழுத்து, கண்கள் பனித்த மோடி!
இந்த நிலையில்தான், கடந்த வருட இறுதியில், அமெரிக்காவும், இங்கிலாந்தும் அடுத்து அடுத்து கொரோனா தடுப்பு மருந்துகளை அறிமுகம் செய்தபோது உலகமே ஓங்கி ஒரு முறை பெருமூச்சு விட்டது.
ஆனால், இந்தியாவில் அந்த தடுப்பூசி எப்போது கிடைக்கும்? விலை அதிகமாக இருந்தால் என்ன செய்வது? என்றெல்லாம் மக்கள் மனங்களில் ஏகப்பட்ட கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தன.
நல்லவேளையாக அரசுகள் எடுத்த உரிய நடவடிக்கையாளும், காவல்துறை, மருத்துவர்கள், முன் களப் பணியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் சேவையாலும், மக்களின் ஒத்துழைப்பாலும், கொரோனா நோய் பரவல் இந்தியாவில் கட்டுக்குள் இருக்கும் இந்த நேரத்தில், தடுப்பூசி இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. மூன்று கோடி பேருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒன்றல்ல, இரண்டு தடுப்பூசிகள் நம்மிடம் உள்ளன. முதல் டோஸ் போட்ட 28 நாட்கள் கழித்து அடுத்த டோஸ் மருந்து போட்டுக் கொண்டதும் கொரோனா நோய் பரவல் முடங்கும். அதன்பிறகு, காச நோய் போலவும், பன்றிக் காய்ச்சல் போலவும், அங்கொன்றும் இங்கொன்றுமாக கொரோனா என்ற பெயர் அடிபடக்கூடும். உரிய உபாயங்களை பின்பற்றினால், அதுவும் பரவாமல் தடுக்க முடியும். ஓராண்டு அவலத்திற்கு, வரும் மார்ச் மாதம் முடிவு கட்டப்போகிறது. அந்த ஒரே நம்பிக்கை, மானுட உள்ளங்களில், தீபாமாக சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. மனதுக்குள் மத்தாப்பு ஒளி பாயத் தொடங்கியுள்ளது.