12ம் வகுப்பு பாஸ் ஆனாலே போதும்! மத்திய அரசு அதிரடி... என்ஐடி, எம்ஐடிகளில் சேர அற்புதமான வாய்ப்பு
டெல்லி: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தப்பட்சம் 75 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை மத்திய அரசு நீக்கியுள்ளதால், என்ஐடி, எம்ஐடி போன்ற தேசிய தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர அருமையான வாய்ப்பு அனைத்து மாணவர்களுக்கும் கிடைத்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
ஆனால், கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே இருந்ததால் பல மாநிலங்களில் 10ம் வகுப்பு, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சில மாநிலங்களில் 12ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
12ம் வகுப்பு தேர்வு முடிவை கவனித்தீர்களா.. இந்த ஆண்டு இதெல்லாம் மிஸ்ஸிங்!
கல்லூரிகளில் சேர
இந்த சூழலில் அண்மையில் தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் 12ம் வகுப்பு தேர்வு முடிவினை வெளியிட்டன. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கு ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகிறார்கள்.
மத்திய அரசு நீக்கம்
இந்நிலையில், தேசிய தொழில்நுட்ப கல்லூரிகளில் (என்ஐடி) சேருவதற்கு 12ம் வகுப்பில் குறைந்தப்பட்சம் 75 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க தேவையில்லை என்று மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்னதாக ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த நடைமுறை முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு தேர்ச்சி
மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், வியாழக்கிழமை டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், `நாட்டில் நிலவும் கொரோனா சூழல் காரணமாக, மத்திய இட ஒதுக்கீடு வாரியம், தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர் சேர்க்கையில் சில தளர்வுகளை வெளியிட்டுள்ளது.. ஜேஇஇ-2020 முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதும்.. அவர் எடுத்திருக்கும் மதிப்பெண்கள் முக்கியமில்லை" என்று கூறினார்.
செப்டம்பரில் நடைபெறும்
பொதுவாக என்ஐடி., மத்திய நிதி உதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களில் சேருவதற்கு ஜேஇஇ முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், 12ம் வகுப்பில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். இப்போது இந்த நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஏற்கனவே, இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட ஜேஇஇ முதன்மை தேர்வுகள் செப்டம்பர் மாதம் 1 முதல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.