தமிழகத்தில் இருந்து 3,000 ஈழத் தமிழரை திருப்பி அனுப்ப நடவடிக்கை: இலங்கை அமைச்சர் தினேஸ் குணவர்த்தன
டெல்லி: தமிழகத்தில் இருந்து 3,000 ஈழத் தமிழரை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இலங்கை அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்பது கோரிக்கை. இதனை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஸ் குணவர்த்தன 2 நாட்கள் பயணமாக நேற்று இந்தியா வருகை தந்தார். அவர் டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
அப்போது, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுதலை, தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் முகாம்களில் உள்ள 3,000 ஈழத் தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என தினேஸ் குணவர்த்தன கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என சட்டசபையில் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆளும் அதிமுகவின் நிலைப்பாடாகவும் இது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஈழத் தமிழரை திருப்பி அனுப்பும் விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.