காஷ்மீர் பிரச்சனை ஓவர்.. அடுத்து இடஒதுக்கீடுதான்.. ஆர்எஸ்எஸ் ஐடியாவும்.. மத்திய அரசின் திட்டமும்!
கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் இருக்கும் இடஒதுக்கீடு முறைக்கு எதிராக மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
டெல்லி: கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் இருக்கும் இடஒதுக்கீடு முறைக்கு எதிராக மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
மத்திய பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்தே மிகவும் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக சட்டம், காஷ்மீரை இரண்டாக பிரித்தது என்று வேகமாக செயல்பட்டு வருகிறது.
அதேபோல் தற்போது ராமர் கோவில் விவகாரத்திலும் மத்திய அரசு கவனம் செலுத்தி உள்ளது. இது தொடர்பான வழக்கு முடிந்த பின் மத்திய பாஜக அரசு ராமர் கோவில் விவகாரத்தில் முக்கியமான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
இருக்கலாம்
இந்த முடிவுகளுக்கு பின்பு எல்லாம் ஆர்எஸ்எஸ் கொடுத்த ஐடியாக்கள் இருக்கிறது என்று புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆர்எஸ்எஸ் அமைப்பு சொல்வதை கேட்டும், அவர்கள் போடும் திட்டங்களை வைத்தும்தான் பாஜக செயல்பட்டு வருகிறது. பாஜகவில் இருக்கும் முக்கால்வாசி தலைவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆர்எஸ்எஸ் தலைவர்
இந்த நிலையில்தான் நேற்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இடஒதுக்கீடு முறைக்கு எதிராக பேசியுள்ளார். அதில் இடஒதுக்கீடு குறித்து நாம் எல்லோரும் ஆலோசிக்க வேண்டும். இது தொடர்பாக விவாதிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள இடஒதுக்கீடு முறை குறித்து முக்கியமான ஆலோசனைகளை, ஆய்வுகளை நாம் நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
வேறு என்ன
பாஜகவில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் நாங்கள் சொல்வதை கேட்பார்கள். எங்கள் ஆலோசனையை செவி மடுத்து அவர்கள் கேட்பார்கள். அதற்காக நாங்கள் சொல்வதை அப்படியே நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்கு கிடையாது என்று மோகன் பகவத் கூறியுள்ளார்.
என்ன
இந்த நிலையில்தான் தற்போது பாஜக ஒருவேளை இடஒதுக்கீடு முறைக்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஆர்எஸ்எஸ் அறிவுரையை ஏற்று பாஜக அப்படி செய்ய வாய்ப்புள்ளது. பாஜகவில் உள்ள முக்கியமான தலைவர்கள் பலர் இடஒதுக்கீடு முறைக்கு எதிரானவர்கள். அவர்கள் ஆளும் மாநிலங்களில் பெரும்பாலான அளவில் பட்டியலினத்தவர்களுக்கு இடஒதுக்கீட்டை குறைத்துள்ளனர்.
வேறு என்ன
அதேபோல்தான் ஓசி பிரிவினருக்கு புதிதாக பொருளாதார ரீதியான 10% இடஒதுக்கீட்டை கொண்டு வந்து உள்ளனர். தற்போது எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கும் 10% ஓசி பிரிவினருக்கும் ஒரே அளவு கட் ஆப் மார்க் நிர்ணயம் செய்யப்படுவதும் நடைபெற்று வருகிறது. பல மத்திய அரசு நிறுவனங்களில் இது பெரிய சர்ச்சையாக உருவெடுத்து உள்ளது. இப்படி தொடர்ந்து இடஒதுக்கீட்டிற்கு எதிராக மத்திய அரசு காய் நகர்த்தி வருகிறது.
மொத்தமாக வாய்ப்பு
காஷ்மீர் பிரச்சனை, பணமதிப்பிழப்பு போன்ற பெரிய நடவடிக்கைகளை பாஜக அரசு மிக எளிதாக எடுத்துவிட்டது. இதனால் இடஒதுக்கீட்டை ஒழிப்பதையும் பாஜக எளிதாக செய்துவிடும். தேர்தல் நேரத்தில் இதனால் பாஜக பெரிதாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் அதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் பாஜக அரசு இடஒதுக்கீட்டை எதிர்த்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.