EIA Draft 2020 : மக்கள் கருத்து கூற அவகாசம் அளித்தது தவறு.. சுப்ரீம் கோர்டில் மத்திய அரசு அப்பீல்
டெல்லி: சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு அறிக்கை பற்றி பொதுமக்கள் கருத்து கூற டெல்லி உயர்நீதிமன்றம் அவகாசம் அளித்தது தவறு என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
Recommended Video
தற்போதைய நிலையில் இந்தியாவில் பெருநிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளைத் தொடங்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ் அனுமதி பெற வேண்டும். அதன்படி, சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 சட்டத்தின் கீழ், திட்டம் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை நிறுவனங்கள் தயார் செய்தாக வேண்டும்.
அதை அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத திட்டமாக இருந்தால் அனுமதி வழங்கும் இல்லாதபட்சத்தில் அனுமதி மறுக்கும். இதுதான் நடைமுறை
நம் கண்ணை நாமே குத்துகின்ற நிலை... சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கைக்கு விஜயகாந்த் எதிர்ப்பு
சூற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு
இந்நிலையில் நாட்டில் சுற்றுச்சூழல் அனுமதி காரணமாக நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்கள் மற்றம் புதிதாக அமல்படுத்தப்பட உள்ள தொழிற்சாலை திட்டஙகள் போன்றவற்றுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 2006ல் மத்திய அரசு பல்வேறு திருத்தங்கள் செய்து 'சூற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு 2020' வரைவு அறிக்கை என்ற பெயரில் கடந்த மார்ச் 23ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. .
சூழியல் ஆர்வலர்கள் கருத்து
இந்த வரைவு அறிக்கையின் படி பொது மக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை. இதுபற்றி சுற்றுச்சூழியல் ஆர்வலர்கள் கூறுகையில், "சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை இல்லாமலே ஒரு திட்டத்தைத் தொடங்கவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் இந்த புதிய வரைவு வழி வகை செய்யும். இந்த திட்டங்களில் பிரச்சனைகள் இருந்தால் பிறகு ஒரு குழு போடப்பட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் ஆண்டுக்கு இரண்டு முறை செயல்பாடுகள் குறித்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை மாற்றி வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தாக்கல் செய்தால் போதும் என்றும் இந்த வரைவில் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றம் செல்ல முடியாது
சூழலுக்கு ஊறு விளைவிக்கும் தொழிற்சாலைகளை எதிர்த்து எந்த அமைப்புகளும் நீதிமன்றங்களுக்குச் செல்ல முடியாது. இந்த வரைவு சட்டமானால் ஒரு நிறுவனத்தை எதிர்த்து தனி அமைப்போ, தனி நபர்களோ இனி நீதிமன்றங்களுக்குச் செல்ல முடியாது. அரசு அமைப்புகள் மட்டுமே செல்ல முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது" என்று சூழியல் ஆர்வலர்கள் கொதித்தனர்.
பொதுமக்களுக்கு அவகாசம்
இந்நிலையில் சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவு அறிக்கை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதமாக இருப்பதாகவும், நாட்டின் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும் பலர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த வரைவு அறிக்கை பற்றி நாடு முழுவதும் கருத்து கேட்க வேண்டும். இதற்காக வரைவு அறிக்கையை தமிழ் உள்பட 22 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும். மேலும் இதுபற்றி ஆகஸ்ட் 11ம் தேதி வரை தங்கள் கருத்துக்களை கூற பொதுமக்களுக்கு அரசு அவகாசம் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.
மத்திய அரசு எதிர்ப்பு
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் புதன்கிழமை மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், "மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும், அதற்காக வழங்கப்பட்ட அவகாசத்தையும் ரத்து செய்ய வேண்டும். இது அரசின் கொள்கை சார்ந்த விஷயமாகும். இதில் நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களும் அடங்கியுள்ளன. அதேபோல் இந்த வரைவு அறிக்கையை மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்பதையும் ஏற்க முடியாது" என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.