24 மணிநேரத்தில் 9 கொலைகள்... கிரைம் நகரமாகும் தலைநகரம் - பீதியில் டெல்லிவாசிகள்
டெல்லி: அடுத்தடுத்து நடைபெறும் கொலைகளால் ஆடிப்போயிருக்கிறது நாட்டின் தலைநகரமான டெல்லி. பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை, தனியாக இருக்கும் மூத்த குடிமக்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 24 மணிநேரத்தில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவம், கொலைகள் என தொடர்ந்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் டெல்லிவாசிகள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். டெல்லி மக்கள் தங்கள் பாதுகாப்புக்காக யார் வீட்டு கதவை தட்டுவது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தென்மேற்கு டெல்லியில் உள்ள வசந்த விகார் பகுதிகளில் வயதான தம்பதியரும் அவருக்கு உதவியாக இருந்த பணிப்பெண்ணும் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று கொலைகள்
கொல்லப்பட்ட அந்த தம்பதியின் பெயர் விஷ்ணு மாத்தூர், சசி மாத்தூர் என்பதாகும். மத்திய அரசுத்துறையில் வேலை செய்து ஓய்வு பெற்ற இந்த தம்பதியர் கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். அவர்களுக்கு வீட்டு வேலை செய்து உதவியாக இருந்த குஷ்பு என்ற பணிப்பெண்ணும் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் உயிரிழந்திருந்தார்.
மூவர் கொலைக்கு காரணம்
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொள்ளை முயற்சியா அல்லது வேறு எதற்காக இந்த கொலை நடைபெற்றது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
முத்த தம்பதியர் கொலை
இந்த தம்பதியருக்கு ஒரு மகன் ஒரு மகள் மட்டும்தானாம். 1982ஆம் ஆண்டு மகன் ஒரு விபத்தில் உயிரிழந்து விட்டான். இதனையடுத்து தென்மேற்கு டெல்லி பகுதியில் குடியேறினர். இந்த தம்பதியரின் மகள் அனிதா கிரேட்டர் கைலாஷ் பகுதியில் வசித்து வருகிறார். அவர் வந்து அடிக்கடி இந்த மூத்த தம்பதியரை கவனித்துக்கொள்வார் என்று அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். இந்த கொலை சம்பவம் அக்கம் பக்கத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொலை கொலையாம் டெல்லி
சனிக்கிழமையன்று அதிகாலையில் மூன்று குழந்தைகளையும் மனைவியையும் டியூசன் ஆசிரியர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்திருந்தார். அந்த பதற்றம் மறைவதற்குள் மூன்று கொலைகள் நடந்துள்ளது டெல்லிவாசிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
|
அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்
இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மக்கள் தங்கள் பாதுகாப்புக்காக யார் வீட்டு கதவை தட்டுவது என்று போலீஸ் மீது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். ஆனால் டெல்லி அமைதிப்பூங்காவாகத்தான் இருக்கிறது என்றும் குற்றச்சம்பவங்கள் எதுவும் அதிகரிக்கவில்லை என்றும் காவல்துறை சார்பில் புள்ளி விபரங்களுடன் மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.