வேலூர் தொகுதிக்கு தேர்தல் அதிரடி ரத்து.. தேர்தல் ஆணையம் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி உத்தரவு
Recommended Video
டெல்லி: தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும் திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்தின் கல்லூரி, பள்ளி மற்றும் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றதைத் தொடர்ந்து கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகின. இதனை தொடர்ந்து அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டன.
பணப்பட்டுவாடா காரணமாக வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என்று புகார்கள் வந்ததை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, தேர்தல் ரத்து செய்யப்படுமா அல்லது இல்லையா என்பதை தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் தலைமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் களமிறக்கப்பட்டனர். இது மட்டுமல்லாது அமமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு பின்னால், அரசியல் அழுத்தம் உள்ளதாக துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.