உ.பி., பீகார்: 2 ராஜ்யசபா இடங்களுக்கு அக்.16-ல் தேர்தல்: தேர்தல் ஆணையம்
டெல்லி: ராஜ்யசபாவில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு அக்டோபர் 16-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் அதேபோல் பீகார் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜெத்மலானி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இருவரும் அண்மையில் உடல்நலக் குறைவால் காலமாகினர். இதையடுத்து ராஜ்யசபாவில் 2 இடங்கள் காலியாகின. இந்நிலையில் இந்த 2 இடங்களுக்கும் அக்டோபர் 16-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இரு தொகுதிகளுக்கும் வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய அக்டோபர் 4-ந் தேதி கடைசிநாள். வேட்புமனுக்கள் மீது அக்டோபர் 5-ந் தேதி பரிசீலனை நடைபெறும். அக்டோபர் 9-ந் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்.
வாக்குப் பதிவு நடைபெறும் அக்டோபர் 16-ந் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.