பணப்பட்டுவாடா புகாரால் ரத்தான வேலூர் தொகுதிக்கு.. ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்!
டெல்லி: பணப்பட்டுவாடாவினால் ரத்தான வேலூர் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2019-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் அதிமுக, திமுக, காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக கட்சி சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கபபட்டனர்.
நாடாளுமன்றத் தேர்தல்
இந்த நிலையில் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்த புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகமும், திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இது தவிர்த்து அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் தங்கள் தரப்பு வேட்பாளர்களை அறிவித்தது.
கட்டுக்கட்டாக பணம்
இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பே திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும் வேலூர் தொகுதி வேட்பாளரும் அவரது மகனுமான கதிர் ஆனந்துக்கு சொந்தமான பள்ளி, கல்லூரியிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கட்டுக்கட்டாக பணம் சிக்கியதாக கூறப்படுகிறது.
தேர்தல் ஆணையம்
இதைத் தொடர்ந்து திமுக பிரமுகரின் சிமென்ட் குடோனில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் பண்டல் பண்டலாக பணம் சிக்கியது. அதில் வார்டு பெயர், தெரு பெயர் என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த தொகுதிக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
ஏசி சண்முகம்
இதையடுத்து ஏப்ரல் 18-ஆம் தேதி வேலூர் நீங்கலாக மற்ற 38 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனிடையே வேலூருக்கும் ஏப்ரல் 18-லோ அல்லது மே 19-லோ தேர்தல் நடத்த வேண்டும் என்று ஏசி சண்முகம் வழக்கு தொடர்ந்தார். ஆனால் எந்த முடிவும் கிடைக்கவில்லை.
தேர்தல் ஆணையம்
இந்த நிலையில் 38 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டதில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணியும், 1 தொகுதியில் மட்டும் அதிமுகவும் வெற்றி பெற்றது. இதையடுத்து முக்கிய தொகுதியான வேலூர் எம்பிக்கு எப்போது தேர்தல் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திரும்ப பெறலாம்
ஆகஸ்ட் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தொகுதியில் போட்டியிட ஜூலை 11-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 18 ஆகும். வேட்புமனுக்கள் 19-ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும். போட்டியிட விருப்பம் இல்லாதவர்கள் வேட்புமனுவை 22-ஆம் தேதி திரும்ப பெறலாம். வேலூருக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.