ஜம்மு காஷ்மீரில் எத்தனை தொகுதிகள் இருக்கும்? எப்போது தேர்தல்? ஆணையம் ஆலோசனை!
ஜம்மு காஷ்மீர் தேர்தல் மற்றும் சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் மிக முக்கியமான ஆலோசனையை நடத்தி உள்ளனர்.
டெல்லி: ஜம்மு காஷ்மீர் தேர்தல் மற்றும் சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் மிக முக்கியமான ஆலோசனையை நடத்தி உள்ளனர்.
காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது.
இந்த நிலையில் இன்னும் மத்திய உள்துறை அமைச்சகம் காஷ்மீரை பிரிப்பதற்கான அதிகாரபூர்வ பணிகளில் இறங்கவில்லை.மாநிலங்களை பிரிக்கும் அமைப்பான எல்லைகளை நிர்ணயிக்கும் வரம்பு ஆணையத்திற்கும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து செல்லவில்லை.
எல்லைகளை நிர்ணயிக்கும் வரம்பு ஆணையம்தான் காஷ்மீரில் எத்தனை மாவட்டங்கள் இருக்கும், லடாக்கில் எத்தனை மாவட்டங்கள் இருக்கும் என்று தீர்மானிக்கும். அதேபோல் இந்த அமைப்புதான் லோக்சபா தொகுதிகள் அங்கு எத்தனை இருக்க வேண்டும், சட்டசபை தொகுதிகள் எத்தனை இருக்கும் என்று முடிவு செய்யும்.
கடைசியாக எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த தொகுதிகள் பிரிக்கப்படும். ஆனால் வரம்பு ஆணையம் இன்னும் இது தொடர்பாக முடிவுகளை எடுக்கவில்லை. இது தொடர்பாக முதற்கட்ட ஆலோசனைகளை மட்டும் அந்த அமைப்பு நடத்தி வருகிறது.
இதையடுத்து தற்போது தேர்தல் ஆணையமும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளது. கடந்த செவ்வாய் கிழமை ஜம்மு காஷ்மீர், லடாக் குறித்து அதிகாரப்பூர்வமற்ற ஆலோசனை நடந்துள்ளது. இதில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லெவசா, சுஷில் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
உள்துறை அமைச்சர் தாக்கல் செய்த காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின்படி ஜம்மு காஷ்மீரில் உள்ள மொத்த சட்டசபை இடத்தின் எண்ணிக்கை 107ல் இருந்து 114 ஆக உயரும். இதற்கு முன் காஷ்மீர் பகுதியில் 46 இடங்களும், ஜம்முவில் 37 சட்டசபை இடங்களும், லடாக்கில் 4 இடங்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையமும் இது தொடர்பாக இறுதி முடிவு எடுத்த பின் ஜம்மு காஷ்மீர், லடாக் இரண்டிலும் எத்தனை தொகுதிகள் இருக்கும். அங்கு எப்போது தேர்தல் நடக்கும் என்று தெரிய வரும்.