உத்தரப் பிரதேசம் உத்தரகண்டில்...காலியாகும் 11 ராஜ்ய சபா இடங்களுக்கு நவம்பர் 9ல் தேர்தல்!!
டெல்லி: உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் காலியாகும் 11 ராஜ்ய சபா இடங்களுக்கு வரும் நவம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.
வரும் நவம்பர் 25ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் இருந்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, சமாஜ்வாடி தலைவர் ராம் கோபால் யாதவ் உள்பட 10 பேர் ராஜ்ய சபா உறுப்பினர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகின்றனர். உத்தரகண்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டு இருந்த நடிகர் ராஜ்பாப்பரும் நவம்பர் 25ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து காலியாகும் மொத்தமுள்ள 11இடங்களுக்கும் வரும் நவம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அன்று மாலையே வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் அறிவிப்பு வரும் அக்டோபர் 20ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் நடக்கும்போது வாக்கு செலுத்த வரும் உறுப்பினர்களுக்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாஸ்க், தெர்மல் ஸ்கேன்னர், சானிடைசர் ஆகியவை பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. சமூக இடைவெளியும் பின்பற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்திரபால் சிங் யாதவ், ஜாவெத் அலி கான், நீரஜ் சேகர், பிஎல் புணியா ஆகிய எம்பிக்களும் ஓய்வு பெறுகின்றனர்.