ஊழல் வழக்கில் தண்டனை: சிக்கிம் முதல்வர் தமாங் தகுதி நீக்க காலத்தை தேர்தல் ஆணையம் அதிரடியாக குறைத்தது
டெல்லி: ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சிக்கிம் முதல்வர் பிரேம்சிங்கின் தகுதி நீக்க காலத்தை 6 ஆண்டுகளில் இருந்து ஓராண்டு ஒரு மாதம் என குறைத்திருக்கிறது தேர்தல் ஆணையம். இதனால் தமாங் இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்த முட்டுக்கட்டை நீக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுடன் சிக்கிம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா அமோக வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் பிரேம்சிங் தமாங் மாநில முதல்வராக பொறுப்பேற்றார்.
ஆனால் ஊழல் வழக்கு ஒன்றில் 2016-ம் ஆண்டு தமாங்குக்கு கீழ்நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்ததால் அவர் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது. ஊழல் வழக்கில் சிறை தண்டனனை அனுபவித்த ஒருவர் 6 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் தமாங் பதவியேற்கும், போதே சர்ச்சை வெடித்தது.
இந்நிலையில் சிக்கிமில் சட்டசபை இடைத்தேர்தலில் தமாங் போட்டியிடுகிறார். பாஜக ஆதரவுடன் தமாங் சிக்கிமில் ஆட்சி நடத்தி வருகிறார். இதனிடையே பல்வேறு சட்டப் பிரிவுகளை சுட்டிக்காட்டி தமக்கு தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட 6 ஆண்டுகால தடையை நீக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை தமாங் அனுப்பியிருந்தார்.
இக்கடிதத்தை பரிசீலித்த தேர்தல் ஆணையம் தமாங்குக்கான தடை காலத்தை ஓராண்டு ஒரு மாதம் என குறைப்பதாக அறிவித்திருக்கிறது. இதன் மூலம் சட்டசபை இடைத்தேர்தலில் தமாங் போட்டியிட தடை இல்லை.
தமாங்குக்கு தரப்பட்ட சலுகையைப் பயன்படுத்தி தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தமது அரசியலை பாஜக இனி ஆடத் தொடங்கலாம். பாஜகவின் விருப்பத்தை முழு வீச்சில் தேர்தல் ஆணையமும் நிறைவேற்றுகிற அறிக்கைகளும் வெளியாகலாம்.