மோடிக்கு எதிராக கொந்தளித்த தேர்தல் ஆணையர் லவசா? உயிருக்கு ஆபத்து விதியை சொல்லி ஆர்டிஐ மனு தள்ளுபடி
டெல்லி: பிரதமர் மோடிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டதாக தேர்தல் ஆணையரில் ஒருவரான அசோக் லவசா அதிருப்தி வெளிப்படுத்தியது தொடர்பான தகவலை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தர முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் சட்டத்தின் பிரிவு 8 (1) (G) படி, எந்தவொரு நபரின் உயிருக்கு அல்லது உடல் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது ரகசிய தகவல் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும் என்றால், தகவல்களை வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கிறது. அந்த சட்டப் பிரிவு அடிப்படையில், இந்த விவகாரத்தில் பதில் அளிக்க முடியாது என்று, புனே நகரை சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் விகார் துர்வே, தாக்கல் செய்த மனுவிற்கு, தலைமை தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளதாம்.
தேர்தல் ஆணையத்தில் 3 ஆணையர்கள் உள்ளனர். அதில், இருவர் சேர்ந்து முடிவெடுத்துவிட்டால், மூன்றாவது நபரின் குரலுக்கு மதிப்பு இல்லாமல் போகிறது என, ஆலோசனை கூட்டம் ஒன்றில், அசோக் லவசா தெரிவித்தார் என்று மீடியாக்களில் தகவல் வெளியானது.
லோக்சபா தேர்தல் நேரத்தில், பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அசோக் லவசா வற்புறுத்தியதாகவும், பிற இரு ஆணையர்களும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பதும், அதிருப்திக்கு முக்கிய காரணம்.
இதையடுத்து, தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டங்களில் லவசா பங்கேற்பதை தவிர்க்க ஆரம்பித்தார்.