மோடி விஷயம் முக்கிய காரணம்.. தலைமை தேர்தல் ஆணையத்தில் வெடித்த பனிப்போர்.. தேர்தல் ஆணையர் போர்க்கொடி
Recommended Video
டெல்லி: தலைமை தேர்தல் ஆணையத்திற்குள் பெரும் பனிப்போர் வெடித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவசா தனது அதிருப்தியை தலைமை தேர்தல் ஆணையருக்கு, கடிதம் எழுதிய தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் முக்கியமான தன்னாட்சி அமைப்புகளில் ஒன்று தேர்தல் ஆணையம். இதில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் பதவி வகிப்பர். தற்போதைய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பதவி வகிக்கிறார். அசோக் லவசா மற்றும் சுசில் சந்திரா ஆகியோர் ஆணையர்களாகும்.
தேர்தல் தொடர்பான முடிவுகளின் போது மூன்று பேரும் ஒருமித்த முடிவு எடுப்பது வழக்கமான நடைமுறை. ஒருவேளை, ஒருமித்த கருத்து எட்ட முடியாவிட்டால், மெஜாரிட்டி ஆதரவு, அதாவது மூவரில் இருவர் ஆதரவு இருந்தால், அந்த முடிவை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தும்.
தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம்! உறுதியாய் வெல்வோம்!- சீமான் சூளுரை
மோடிக்கு கிரீன் சிக்னல்
இந்த நிலையில்தான், தனது முடிவு மதிக்கப்படுவதில்லை என்ற அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் அசோக் லவசா. அதிலும் குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான புகார்களை விசாரிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டி வருகிறது என்பது, அசோக் லவசா அதிருப்திக்கு முக்கிய காரணம். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, நரேந்திர மோடிக்கு எதிராக கிடைக்கப்பெற்ற 6 புகார்களிலும், அவருக்கு 'க்ளீன் சிட்' கொடுத்தது தேர்தல் ஆணையம். இதில், அசோக் லவசாவுக்கு உடன்பாடு இல்லையாம்.
தலைமை ஆணையருக்கு கடிதம்
இந்த நிலையில், மே 4ம் தேதி தலைமை தேர்தல் ஆணையருக்கு, அசோக் லவசா எழுதிய கடிதம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணைய கூட்டங்களில் நான் பங்கேற்பது அர்த்தமற்றதாகிவிட்டது. எனது, முடிவுகள், மெஜாரிட்டி அந்தஸ்தை பெறாமல், மைனாரிட்டி அந்தஸ்தை பெற்று புறக்கணிக்கப்படுகின்றன. அது ஏற்கப்படுவதில்லை என்று தனது கடிதத்தில், அசோக் லவசா சுட்டிக் காட்டியுள்ளார்.
குழுவில் இல்லை
தேர்தல் ஆணையம் சட்டப்படி நடந்துகொள்ளவும், மைனாரிட்டி கருத்து ஏற்கப்படவும், வேறு வகையிலான முயற்சிகளை நான் எடுக்கலாம் என யோசித்துக் கொண்டுள்ளேன். தேர்தல் ஆணையத்தின் அனைத்து முடிவுகளும், சிறுபான்மை கருத்துக்களும் கூட வெளிப்படையுடன் இருக்க வேண்டும் என்று நான் எடுத்த முயற்சிகள், கண்டுகொள்ளப்படவில்லை. எனவே, புகார்கள் மீதான விசாரணை குழுவில் நான் இடம்பெற விரும்பவில்லை. இவ்வாறு அசோக் லவசா தனது கடிதத்தில், தலைமை தேர்தல் ஆணையரிடம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
மோடிக்கு சலுகை
இந்த கடிதத்தை தொடர்ந்து, அசோக் லவசாயுடன், தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த ஆலோசனையின்போது, தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகாரில், சிறுபான்மை கருத்து பதிவு செய்யப்பட தேவையில்லை என்று விதிமுறை இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் சுட்டிக் காட்டியதாக தெரிகிறது. ஆனால், பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு மட்டும் சலுகை காட்டப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அசோக் லவசா, தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டங்களில் இருந்து விலகி இருக்க தொடங்கியுள்ளார்.
சரமாரி குற்றச்சாட்டுகள்
லோக்சபா தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது, மோடியிடமும், அமித்ஷாவிடமும் பணம் உள்ளது. தேர்தல் ஆணையம் அவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. எங்களிடம் உண்மை உள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அசோக் லவசா கடித விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.