மோடி ஹெலிகாப்டரை சோதனையிட்ட அதிகாரி சஸ்பென்ட்.. அப்போ உள்ளே என்ன இருந்தது? காங். கேள்வி
டெல்லி: பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட அதிகாரி சஸ்பென்ட் செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
பிரதமர் மோடி கடந்த 9 ம் தேதி கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக வந்தார். ஹெலிகாப்டரரில் வந்த அவருடன் பாதுகாப்புக்காக மேலும் 3 ஹெலிகாப்டர்கள் வந்துள்ளன.
மோடி வந்த ஹெலிகாப்டர் தரையிறங்கியதும், அதில் இருந்து ஒரு கருப்பு நிற பெட்டி ஒன்றை அதிகாரிகள் அவசரம் அவசரமாக தரை இறக்கி ஒரு காரில் கொண்டு போய் வைத்துள்ளனர். அந்தக் காரும் உடனடியாக கிளம்பி சென்றுள்ளது. இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பளார்.. பளார்.. ஹர்திக் பட்டேல் கன்னத்தில் விழுந்த அறை.. பிரச்சாரத்தில் ஷாக்- வீடியோ
சிறப்பு பாதுகாப்பு படை
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறுகையில், அந்தப் பெட்டி குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும். அந்தப் பெட்டியில் என்ன இருந்தது என்பது குறித்த உண்மை வெளியே வர வேண்டும். ஹெலிகாப்டரில் இருந்து இறக்கப்பட்ட பெட்டி தனியார் இன்னோவா காரில் ஏற்றப்பட்டுள்ளது. அந்த இன்னோவா கார் சிறப்பு பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பில் இடம் பெறவில்லை. இது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கர்நாடக மாநில காங்கிரசார் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர் என்று ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.
அதிகாரிகள் தூக்கி ஓடும் காட்சி
பிரதமரின் ஹெலிகாப்டரில் இருந்து இறக்கப்பட்ட பெட்டியை அதிகாரிகள் தூக்கி கொண்டு ஓடும் காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஓடிஸா மாநிலம் சம்பல் பூருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் மோடி சென்றார். அப்போது அவரது ஹெலிகாப்டர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளதா என்பதை அறிய தேர்தல் பார்வையாளர் முகமது மோசின் ஹெலிகாப்டரை சொதனையிட்டுள்ளார்.
விதிமுறைகள்
முகமது மோசின் சொதனையிட்டதும் இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் முகமது மோசின் உடனடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். இவரது இந்த சஸ்பென்சன் குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. டிவிட்டரில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் தலைவர்கள், ஆகியோரின் ஹெலிகாப்டர்களை சோதனையிட தேர்தல் ஆணையத்தின் விதிமுறை அனுமதிக்கிறது. சிறப்பு பிரிவு பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பில் வருவோரை சோதனையிட முடியாது என்று கூற முடியாது. மோடியின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட அதிகாரி சஸ்பென்ட் செய்யப்பட வேண்டியதன் அவசியம் என்ன? அந்த அதிகாரி ஏன் மோடியின் ஹெலிகாப்டரை சோதனையிட்டார்? இதன் மூலம் தேர்தல் ஆணையம் என்ன செய்தியை கூற முயல்கிறது? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹெலிகாப்டரில் எடுத்தது என்ன
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பல்வேறு கேள்விகள் எழுப்பப் பட்டுள்ளன. அதிகாரி ஒருவர் தனது கடமையை செய்யும் நோக்கில் வாகனத்தை சோதனையிட்டதற்காக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். அரசு வாகனங்கள் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த விதிகள் அனுமதி அளிக்கிறதா? பிரதமர் மோடியின் வாகனம் சோதனை செய்யப் படுவதில் இருந்து விதிவிலக்கு பெற்றதும் அல்ல, அப்படியிருக்கும்போது மோடி தனது ஹெலிகாப்டரில் என்ன எடுத்து சென்றார்?
விசாரிக்க வேண்டும்
தேர்தல் ஆணையம் அனைத்துத் தலைவர்களின் வாகனங்களையும் சோதனையிடுவதற்கு பதிலாக தனது அதிகாரியையே சஸ்பென்ட் செய்துள்ளது. மோடியின் ஹெலிகாப்டரில் இருந்த பெட்டி குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தேர்தல் ஆணையம் அதிகாரி ஒருவரை சஸ்பென்ட் செய்திருப்பது ஒருதலைபட்சமானது என்று கூறியுள்ளது காங்கிரஸ் கட்சி.