2014 தேர்தலைவிட இந்த தேர்தலில் அதிக இடங்கள்... அமோக வெற்றியை நோக்கி பாஜக!!
டெல்லி: கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலைவிட இந்த தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டு இன்று வாக்குகள் எண்ணும் பணி நடந்து வருகிறது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிக மோசமான பின்னடவை சந்தித்துள்ளன.
கடந்த 2014 லோக்சபா தேர்தலில் பாஜக 282 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. கடந்த முறை முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் 44 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. கடந்த தேர்தலில் மோடி அலை வீசியதுதான் வெற்றிக்கு காரணமாக பார்க்கப்பட்டது.
பணமதிப்பு இழப்பு நடவடிக்கை, ரிலையன்ஸ், அதானி குழுமங்களுக்கு மறைமுகமாக சலுகை வழங்கியது, ரஃபேல் விமான பேரம் தொடர்பான குற்றாச்சாட்டுகள் மோடி மீது சுமத்தப்பட்டது. இது மோடிக்கு பின்னடவை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் கருதின.
ஆனால், லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த முறை 282 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக இந்த முறை 295 தொகுதிகளை கைப்பற்றும் என தெரிகிறது.
கலக்கும் பாஜக.. லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் 290 தொகுதிகளில் தனித்து முன்னிலை!
உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 82 தொகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இதேபோன்று, குஜராத், டெல்லி, பீகார், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் கை ஓங்கி இருக்கிறது.
தென்மாநிலங்களில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் பாஜகவிற்கு பின்னடைவுதான் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் மட்டுமே பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அங்கு மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக கூட்டணி 15 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 13 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
தேர்தல் நடத்தப்பட்ட 542 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 340 இடங்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணிக்கு 336 இடங்கள் கிடைத்தன. ஆனால், இந்த முறை அதைவிட அதிக இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போதுள்ள நிலவரப்படி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 102 இடங்களும், இதர கட்சிகளுக்கு 100 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், அதைவிட அதிக தொகுதிகளுடன் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
பிரதமர் மோடி மீதும், வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதும் எதிர்க்கட்சிகள் பல்வேறு புகார்களை அடுக்கின. அதையெல்லாம் தாண்டி, தற்போது பாஜக கூட்டணி அமோக வெற்றியை நோக்கி செல்கிறது. இதனால், மோடி மீண்டும் பிரதமராவது உறுதியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு பழையபடி 50 இடங்களுக்குள்தான் கிடைக்கும் என்று இதுவரை வெளியான முடிவுகள் மூலமாக கணிக்கப்படுகிறது.