காஷ்மீரில் விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்படும்.. சுதந்திர தின உரையில் உறுதியளித்த மோடி
டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அங்கு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார்.
நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி, செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிறகு அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது இதை அவர் அறிவித்தார். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொகுதி மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் நிறைவடைந்ததும் உடனடியாக பொதுத்தேர்தல் நடத்தப்படும்.
ஜம்மு-காஷ்மீர் தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு முதல்வர் மற்றும் அமைச்சர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும். நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
தேசிய புதிய கல்விக் கொள்கை 21ம் நூற்றாண்டின் இந்தியாவை வடிவமைக்கும்- மோடி புகழாரம்
ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஓராண்டு, வளர்ச்சிக்கான புதிய பயணமாக அமைந்தது. ஜம்மு-காஷ்மீரில் வாழும் பெண்கள் மற்றும் தலித்துகள், சம உரிமை பெற்றனர். புலம்பெயர்ந்தவர்களுக்கு உரிய கண்ணியம் காஷ்மீரில் வழங்கப்பட்டது இந்த ஓராண்டில்தான். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீரை கடந்த வருடம் யூனியன் பிரதேசமாக மாற்றியது மத்திய அரசு. அங்கு தற்போது துணைநிலை ஆளுநர் நிர்வாகம் செய்து வருகிறார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒருங்கிணைந்து இருந்த லடாக் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.