கிரிக்கெட் வீரர்களை கொண்டு... இந்தியாவின் பிம்பத்தை சரி செய்ய முடியாது... சசி தரூர் பாய்ச்சல்
டெல்லி: ஏற்கனவே மத்திய அரசின் ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கை காரணமாக சர்வதேச அளவில் இந்தியாவின் பிம்பம் சேதமாகியுள்ளது என்றும் இதை கிரிக்கெட் வீரர்களின் ட்வீட்களால் சரி செய்ய முடியாது என்றும் காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் மூன்று புதிய விவசாய சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்த விவசாய சட்டங்கள் விவசாயத்தை காப்ரேட்கள் கையில் கொடுக்கும் வகையில் உள்ளதாகக் கூறி கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதிலும் குடியரசு தின டிராக்டர் பேரணிக்குப் பின், தலைநகரில் விவசாயிகள் போராடும் இடங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் போராட்டம் நடைபெறும் இடங்களில் இணையச் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது, பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச பிரபலங்கள் ஆதரவு
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்து நாம் ஏன் பேசுவதில்லை என பிரபல பாப் பாடகி ரிஹான்னா ட்வீட் செய்திருந்தார். அவரைத் தொடர்ந்து மியா கலிஃபா, இளம் பருவ நிலை ஆர்வலர் கிராட்டா தன்பெர்க் உள்ளிட்ட பலரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தனர். இந்நிலையில், இது உள்நாட்டு பிரச்னை என்றும் இதில் அந்நியர்கள் யாரும் தலையிட வேண்டாம் என்றும் பாலிவுட் நடிகர்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் என பலரும் ட்வீட் செய்திருந்தனர்.
சரி செய்ய முடியாது
இது குறித்து திருவனந்தபுரம் எம்பியும் காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சசி தரூர் கூறுகையில், "இந்தியப் பிரபலங்களை மேற்கத்திய நாடுகளுக்குப் பதிலளிக்க வைத்து பெரும் தர்ம சங்கட நிலையை ஏற்படுத்துகிறது. மத்திய அரசின் ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கை காரணமாக சர்வதேச அளவில் இந்தியாவின் பிம்பம் சேதமாகியுள்ளது. இதை கிரிக்கெட் வீரர்களின் ட்வீட்களால் சரி செய்ய முடியாது" என்று பதிவிட்டிருந்தார்.
சிதம்பரம் கேள்வி
முன்னதாக, வெளியுறவுத் துறை அமைச்சகமும் வெளியாட்கள் என்ன நடந்தது என்பது தெரியாமல் கருத்து கூறுவது பொறுப்பற்ற செயல் என ட்வீட் செய்திருந்தது. இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரம் தனது ட்விட்டரில்,"மனித உரிமை மற்றும் மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினைகள் தேசங்களுக்கு அப்பாற்பட்டது. பிறகு ஏன் மியான்மரில் ராணுவத்தால் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு, அமெரிக்க நாடாளுமன்ற கட்ட தாக்குதல் ஆகியவை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் கவலை தெரிவித்தது" என்று ட்வீட் செய்திருந்தார்.
ராகுல் மறுப்பு
அதேநேரம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி, இதற்கு மாறான கருத்தைத் தெரிவித்துள்ளார். விவசாயிகள் போராட்டத்தில் சர்வதேச பிரபலங்களின் ஆதரவு குறித்த கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும், இது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை என்றும் அவர் குறிப்பிட்டார்,