அவசர கால கடன் திட்டத்துக்கு ரூ.2.05 லட்சம் கோடி ஒதுக்கீடு.. காலஅவகாசத்தை நீட்டித்த நிதியமைச்சர்!
டெல்லி: அவசர கால கடன் திட்டத்தின் கீழ், 61 லட்சம் கடன்களை அளிக்க மொத்தம் ரூ. 2.05 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை ரூ .1.52 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அத்துடன் இந்த கடன்களை பெற காலஅவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சரிந்துகிடக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டதுடன். பொருளதாரத்தை வளர்ச்சி அடைய வைக்க புதிய அறிவிப்புகளையும் வெளியிடப்போவதாகவும் கூறினார்.
இது பற்றி நிர்மலா சீதாராமன் கூறுகையில், அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் 10 சதவீதம் உயர்ந்தது. வங்கி கடன் 5.1% மேம்பட்டது. எனர்ஜி செக்டாரில் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
ரூ .1.4 லட்சம் கோடி கடன்
பிரதமர் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ் கடன் கேட்டு இதுவரை 183.14 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதுவரை பிரதமர் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ரூ .1.4 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது நபார்ட் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் அவசர பணி மூலதனம் ரூ .25,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ரூ. 2.05 லட்சம் கோடி
NBFCS / HFC க்கு சிறப்பு பணப்புழக்க திட்டத்தின் மூலம் ரூ .7,227 கோடி வழங்கப்பட்டுள்ளது. அவசர கடன் பணப்புழக்க உத்தரவாத திட்டத்தின் கீழ், 61 லட்சம் கடன்களை அளிக்க மொத்தம் ரூ. 2.05 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை ரூ .1.52 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது,
யாரெல்லாம் வாங்கலாம்
மூலதன செலவினங்களுக்காக 11 மாநிலங்களுக்கு வட்டி இல்லாத கடன்களாக ரூ .3,621 கோடியை வழங்கி உள்ளோம். கூடுதல் மூலதன செலவினங்களுக்காக போக்குவரத்து அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ .25,000 கோடியை வழங்கப்பட்டுள்ளது. அவசர கால கடன் உத்தரவாத திட்டம் 2021 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது சிறு குறு நடுத்தர (எம்.எஸ்.எம்.இ) நிறுவனங்கள், முத்ரா கடன் வாங்கியவர்கள், வணிக நிறுவனம் மற்றும் வணிக நோக்கங்களுக்காக தனிநபர் கடன்கள் ஆகியவை இந்த திட்டத்தில் கடன் பெற தகுதியான நிறுவனங்கள் ஆகும்.
என்ன சலுகை
அவசர கால கடன் திட்டத்தின் கீழ் 1 ஒரு வருட கடன் சலுகையும் (moratorium), கடனை திருப்பி செலுத்த 4 வருட அவகாசம் கொடுக்கப்பட்டது. தற்போது அவகாச காலத்தை 5 வருடமாக உயர்த்தப்படுகிறது" எனறார்.