எல்ஐசி பங்குகளை விற்பனை செய்தால் போராட்டம்.. ஊழியர் சங்கம் அறிவிப்பு
டெல்லி: எல்.ஐ.சியில் வைத்திருக்கும் குறிப்பிட்ட அளவு பங்குகளை அரசு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. 2020- 21ம் ஆண்டு பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வாறு கூறியிருந்தார்.
இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள, எல்.ஐ.சி ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் அரசின் நடவடிக்கை "தேசிய நலனுக்கு எதிரானது" என்று எச்சரித்துள்ளது.
எல்.ஐ.சியில் உள்ள பங்குகளில் ஒரு பகுதியை விற்கும் அரசின் திட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம், இந்த நடவடிக்கை தேசிய நலனுக்கு எதிரானது என்று ஊழியர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பொருளாதார வளர்ச்சியில் எல்.ஐ.சி நிறைய பங்களிப்பு செய்துள்ளதாகவும், நிறுவனத்தில் அரசின் பங்குகளை நீர்த்துப்போகச் செய்வது நாட்டின் பொருளாதார இறையாண்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் கூறினார்.
அரசு தனது இந்த திட்டத்தை முன்னெடுத்துச் சென்றால், நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சியின் ஊழியர் சங்கங்கள் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தும், என்றார். இது எல்.ஐ.சியின் பல கோடி பாலிசிதாரர்களையும் பாதிக்கும் என்று அவர் குற்றம் சாட்டினார்.
பொன்முட்டையிடும் வாத்தை அறுப்பதா? எல்.ஐ.சி பங்குகள் விற்பனைக்கு ராமதாஸ் கடும் எதிர்ப்பு
எல்ஐசி என்பது பல இந்தியர்கள் வாழ்வில் இரண்டர கலந்துவிட்ட ஒரு பொதுத் துறை நிறுவனமாகும். 1956 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட எல்.ஐ.சி முழுமையாக மத்திய அரசுக்கு சொந்தமானது. இந்தியாவின் ஆயுள் காப்பீட்டு சந்தை பிரிவில் அதிக பங்கு வைத்திருப்பது எல்ஐசிதான். எல்ஐசி என்றால் நம்பி பாலிசி எடுக்கலாம் என்று, மக்கள் மத்தியில் இதுவரை எண்ணம் இருந்தது. இப்போது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பல குழப்பங்களுக்கு காரணமாகியுள்ளது.