ப சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத்துறை லுக்அவுட்நோட்டீஸ்.. வெளிநாட்டுக்கு போக முடியாது.. !
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமின் நிராகரிக்கப்பட்ட நிலையில் ப சிதம்பரம் வெளிநாடு செல்வதை தடுக்க வேண்டும் என அனைத்து விமான நிலையங்களுக்கும் அமலாக்கத்துறை லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்தவர் ப .சிதம்பரம். கடந்த 2007ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து நிதியை பெறுவதில் அனுமதி வழங்கியதில் 305 கோடி அளவுக்கு மோசடி நடந்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இந்த விவகாரத்தில் சிதம்பரம் மீது பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது. பணபரிவர்த்தனை முறைகேடு நடந்தது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் பெயரும் சேர்க்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறை சென்ற கார்த்தி சிதம்பரம் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
உச்சகட்ட பரபரப்பு.. மதியம்தான் தலைமை நீதிபதி முடிவு.. அதற்குள் ப.சிதம்பரத்தை கைது செய்ய வாய்ப்பு?
இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் முன்ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் அவரை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக முயன்று வருகிறார்கள் 2 மணி நேரத்தில் சிதம்பரம் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர். ஆனால் இதுவரை ஆஜராகவில்லை.
இதனிடையே சிதம்பரம் வீட்டுக்கு நேற்று இரண்டு முறையும் இன்று ஒருமுறை அதிகாரிகள் போய் அவர் இல்லாததால் திரும்பி வந்துள்ளனர். ப சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை உடனே விசாரிக்க நீதிபதி ரமணா மறுத்துவிட்டார். இதனால் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் முறையிட்டுள்ளார்கள். அவர் பிற்பகலுக்கு பிறகே ப சிதம்பரம் மனுவை விசாரிப்பது குறித்து முடிவெடுவக்க உள்ளார்.
எனினும் தற்போது வரை சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. இதையடுத்து ப சிதம்பரம் வெளிநாடு செல்வதை தடுக்க வேண்டும் என அனைத்து விமான நிலையங்களுக்கும் அமலாக்கத்துறை லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதன்மூலம் சிதம்பரத்தின் மீதான பிடியை அமலாக்கத்துறையும் சிபிஐயும் இறுக்கியுள்ளது. இன்று அவரை கைது செய்ய சிபிஐ முனைப்பு காட்டி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.