ப சிதம்பரத்திற்கு 12 நாடுகளில் சொத்துக்கள் இருக்கு .. உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில்
டெல்லி: ப சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் ப சிதம்பரம் உள்பட வழக்கில் தொடர்புடையோருக்கு 12 நாடுகளில் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப சிதம்பரத்தின் ஜாமின் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று பட்டியலிடப்படவில்லை. இதனிடையே ப சிதம்பரத்தை பண மோசடி வழக்கில் கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டு இருந்தது.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை ப சிதம்பரம் அணுகிய நிலையில் அமலாக்கத்துறை திங்கள் வரை கைது செய்ய தடை விதித்தது. மேலும் பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி இன்று பதில் மனு தாக்கல் செய்த அமலாக்கத்துறை, ப சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. அந்த மனுவில், நிதி புலனாய்வு பிரிவு வழங்கியுள்ள தகவலின்படி, ப சிதம்பரம் மற்றும் அவரோடு சேர்ந்து குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு 12 வெளிநாடுகளில் சொத்துக்களும் வங்கி கணக்குகளும் உள்ளது. குறிப்பாக அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரிட்டீஸ் வர்ஜீனியா தீவு, பிரான்ஸ், கிரீஸ், மலேசியா, மொனாக்கோ, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் உள்ளது. இதை தங்கள் முன்பு சமர்பித்துள்ளோம்.
சிபிஐ நீதிமன்ற உத்தரவிற்கு எதிரான ப.சிதம்பரத்தின் வழக்கு.. இன்று விசாரிப்பதில் சிக்கல்!
இது தொடர்பான பண பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணைகளை ப சிதம்பரம் மற்றும் குற்றம்சாட்டப்பட்டோர் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.