ப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி
டெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 21-ந் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்து டெல்லி திஹார் சிறையில் அடைத்தனர். சிபிஐ வழக்கில் ப. சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது.
முன்னதாக ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் ப.சிதம்பரத்தை திகார் சிறையில் கைது செய்தது அமலாக்கப் பிரிவு. இந்நிலையில் நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் இன்று ஆர்ஜபடுத்தப்பட்டார்.
அப்போது ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா வலியுறுத்தினார். அதேநேரத்தில் ப. சிதம்பரத்தை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியது.
இதற்கு ப. சிதம்பரம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் அமலாக்கத்துறையின் காவலுக்கு சிதம்பரம் அனுப்பப்பட்டால் தனி ஏசி அறை, மேற்கத்திய கழிவறை, வீட்டு உணவு ஆகியவற்றை அனுமதிக்க வேண்டும் என்றும் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ப. சிதம்பரத்தை 7 நாட்கள் (அக்.24 வரை) காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு அனுமதி அளித்தது. மேலும் சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலையும் 7 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் ப. சிதம்பரம் கேட்டிருந்த வசதிகளை செய்து தரவும் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்தது.