விஜய் மல்லையா பிரான்சில் வாங்கி வைத்திருந்த 1.6 மில்லியன் யூரோ சொத்துக்கள்.. அமலாக்கத்துறை முடக்கம்
டெல்லி: பிரான்சில் உள்ள விஜய் மல்லையாவின் 1.6 மில்லியன் யூரோ (14 கோடி) மதிப்புள்ள சொத்தை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
சுமார் 9000 கோடி ரூபாய் பணத்தை இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடியவர் தொழிலதிபர் விஜய் மல்லையா.
கிங்பிஷர் விமான நிறுவனத்தை நடத்தி வந்த இவர் ஒரு கட்டத்தில் தொழிலில் கடும் சரிவை சந்தித்த நிலையில் வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாமால் தப்பி ஓடிவிட்டார்.
தற்போது விஜய் மல்லையா மீது லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. தொழிலதிபர் விஜய் மல்லையா மீது மத்திய அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது.
7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொது பெயர்.. முதல்வர் அறிவிப்பு
சொத்துக்கள் பறிமுதல்
தற்போது விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. விஜய் மல்லையாவின் 1.6 மில்லியன் யூரோ மதிப்புள்ள (இந்திய மதிப்பில் 14.34 கோடி) சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. கிங்பிஷர் விமான நிறுவனத்திற்கு வாங்கிய கடனுக்காக முடக்கி செய்துள்ளது.
பிரான்ஸ் சொத்து
இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிவிப்பில். "பிரான்சின் 32 அவென்யூ ஃபோச்சில் அமைந்துள்ள விஜய் மல்லையாவின் சொத்து அமலாக்க இயக்குநரகத்தின் கோரிக்கையின் பேரில் பிரெஞ்சு ஆணையம் முட்க்கம் செய்துள்ளது. பிரான்சில் முடக்கம் செய்யப்பட்ட சொத்தின் மதிப்பு 1.6 மில்லியன் யூரோக்கள் (ரூ .14 கோடி) ஆகும். கிங்பிஷர் ஏர்லைன்ஸ் லிமிடெட் வங்கியின் கணக்கிலிருந்து வெளிநாட்டிற்க பெரிய தொகை அனுப்பப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது, " என்று கூறியுள்ளது.
நாடு கடத்த உத்தரவு
முன்னதாக இந்தியாவின் வேண்டுகோளின் பேரில், கடந்த 2017-ம் ஆண்டு விஜய் மல்லையா கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் உடனடியாக ஜாமீனில் வெளிவந்தார். அவரை நாடு கடத்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு எதிரான விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்தது. இருப்பினும், அவர் இன்னும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படவில்லை.
எவ்வளவு காலம்
இதுகுறித்து கேட்டபோது, இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் (பொறுப்பு) ஜன் தாம்சன் அண்மையில் அளித்த பேட்டியில். சில சட்டப்பிரச்சினைகள் இருப்பதால், அவற்றுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. இதற்கு தீர்வு கிடைக்கும் வரை, விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது. அது, ரகசியமான விவகாரம். அதைப்பற்றி நான் விரிவாக கூற முடியாது. இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்றும் நான் கணிக்க முடியாது. இருப்பினும், கூடிய விரைவில் தீர்வு காண முயன்று வருகிறோம் என்றார்.
கடனை கட்ட தயார்
இதனிடையே தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுக்கும் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய அசல் தொகையில் 100 சதவீதத்தை திரும்பப் தர விரும்புவதாக அடிக்கடி கூறி வருகிறார்.