மதத்தை நிரூபிக்க ருத்ராட்சத்தை காட்டணும்.. உயிருக்காக கெஞ்சணும்.. இதுதான் திகிலூட்டும் இன்றைய டெல்லி
டெல்லி: மதத்தை நிரூபிக்க ருத்ராட்சத்தை காண்பிக்க வேண்டும். உயிருக்காக வன்முறை கும்பலிடம் கெஞ்ச வேண்டும். இதுதான் இன்றைய டெல்லியின் நிலை என ஒரு ஆங்கில செய்தி நிறுவனத்தின் மூத்த செய்தியாளர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
டெல்லியில் கடந்த இரு மாதங்களாக சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லியில் ஷாகீன்பாக், ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜாபர்பாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டம் தொடங்கியது. இந்த நிலையில் ஜாபர்பாத், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நடக்கிறது.
கடுமை
இந்த கலவரத்தில் இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடைகளையும் கலவரக்காரர்கள் விட்டு வைக்காமல் அடித்து நொறுக்குவதால் மேற்கண்ட பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த கலவரங்கள் குறித்து செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களும் கடுமையாக தாக்கப்படுகின்றன.
15 கி.மீ. தூரம்
டெல்லியின் தற்போதைய நிலை குறித்து ஆங்கில செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் சவுரப் சுக்லா (இவர் கலவரத்தில் தாக்கப்பட்ட தமிழக செய்தியாளர் அரவிந்த் குணசேகருடன் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுபவர்) விவரிக்கிறார். அவர் கூறுகையில் வடகிழக்கு டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் வன்முறை தொடர்பான செய்திகளை சேகரித்து வருகிறேன். பின்னர் நாடாளுமன்றத்திலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள மவ்ஜ்பூருக்கு திரும்பினேன்.
துப்பாக்கிக் குண்டுகள்
அப்போது நான் பார்த்த காட்சிகள் எல்லாம் திகிலூட்டுபவையாக உள்ளன. கடைகளை சூறையாடுதல், கல்வீச்சில் ஈடுபடுதல், மக்களை தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் ஒரு கும்பல் ஈடுபட்டு கொண்டிருந்தது. அந்த சூழலே மிகவும் பதற்றமாக இருந்தது. துப்பாக்கிக் குண்டுகள் வெடிப்பதையும் நாங்கள் கேட்டோம். மிகவும் வித்தியாசமாக இருந்தது.
செயல்
பகல் 12 மணிக்கு மவ்ஜ்பூரில் நடக்கும் சம்பவங்களை செய்தியாக்கிவிட்டு மிகவும் பதற்றமான பகுதிகளான கோகுல்புரி மற்றும் காரவால்நகருக்கு சென்றோம். செய்தியாளர்கள் என்றால் கலவரக்காரர்கள் தாக்குகிறார்கள் என்பதால் நாங்கள் எங்கள் நிறுவனத்தின் மைக்குகளுக்கு பதிலாக செல்போனை பயன்படுத்தி கலவரத்தை செய்தியாக்கினோம். அப்போது மதியம் 1 மணிக்கு வீடுகள் எரிந்து கொண்டிருந்தன. வழிபாட்டுத் தலங்கள் சூறையாடப்படுகின்றன. குடித்துவிட்டு சில இளைஞர்கள் இந்த செயலை செய்து கொண்டிருந்தனர்.
அடையாள அட்டை
அங்கு போலீஸார் யாரும் இல்லை. சீலம்பூர் அருகே நானும் என் நண்பர் அரவிந்தும் செய்தி சேகரிக்க சென்றோம். அப்போது 50 மீட்டருக்கு அப்பால் இருந்த அரவிந்தை ஒரு கும்பல் செய்தி சேகரித்ததற்காக கடுமையாக தாக்கினர். அவரை காப்பாற்ற சென்ற என்னை வயிற்றில் உதைத்தனர். நான் அரவிந்தை காப்பாற்ற சென்றதால் என்னையும் தாக்கினர். பின்னர் என்னை பற்றி விவரங்களை அந்த கும்பல் கேட்டது. என்னிடம் வெளிநாட்டு ஊடகம் என்பதற்கான அடையாள அட்டை இருந்ததால் அதை காண்பித்தேன்.
வெளிநாட்டு ஊடகம்
மேலும் இந்திய டிவி சேனலுக்கு நான் செய்தி சேகரிக்கவில்லை. வெளிநாட்டு ஊடகங்களுக்குத்தான் சேகரிக்கிறேன் என தெரிவித்தேன். அந்த அட்டையில் சுக்லா என்ற பெயரை பார்த்தனர். பின்னர் அந்த கும்பலில் இருந்தவர்கள் எனது ஜாதியின் பெயரை எனது சுக்லா என்ற பெயரை வைத்தே கண்டுபிடித்து கூறினர். பின்னர் எனது கழுத்தில் அணிந்திருந்த ருத்ராட்சத்தை காண்பித்தவுடன் என்னை விட்டுவிட்டார்கள். பின்னர் எங்களது ஐபோன்களை பறித்து அதிலிருந்த போட்டோக்கள், வீடியோக்களை அழித்தனர்.
Recommended Video
போலீஸார்
என் உயிரை காப்பாற்றிக் கொள்ள ருத்ராட்சத்தை காண்பித்தது என் வாழ்நாளில் மிகவும் மோசமான சம்பவமாகும். என்னை திட்டிய அந்த கும்பல் மீண்டும் அடித்தனர். அவர்களிடம் கையெடுத்து கும்பிட்டு எங்களை போக விடுங்கள் என கெஞ்சினோம். எங்களுடன் இருந்த மற்றொரு சேனலின் பெண் பத்திரிகையாளரும் கெஞ்சினார். இந்த சம்பவம் நடந்த இடத்தை சுற்றி சில போலீஸார் இருந்தனர். ஆனால் அவர்கள் எதையும் செய்யவில்லை. மதம் தொடர்பான சில முழக்கங்களை எழுப்பச் செய்து , இதற்கு மேல் இந்த இடத்தில் பார்த்தால் கொலை செய்துவிடுவோம் என அந்த கும்பல் எங்களை மிரட்டி விட்டு சென்றன. எப்படி இருந்த டெல்லி இன்று வன்முறையால் தேசிய அவமானம் ஆகிவிட்டதே என்பதை எண்ணி வருந்தினோம் என அந்த செய்தியாளர் தெரிவித்தார்.