Awantipora attack:தீவிரவாதத்தை ஒழிக்க ஓரணியில் திரள்வோம்.. ராகுல், மன்மோகன் அறைகூவல்
Recommended Video
டெல்லி:தீவிரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் துணை நிற்கும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களும் வீர மரணம் அடைந்தனர்.
நாடு முழுவதும் இந்த தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடியும் கூறி உள்ளார். இந் நிலையில், தீவிரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தியும், முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங்கும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் காங்கிரஸ் ஒத்துழைப்பு அளிக்கும்.
காஷ்மீர் தாக்குதல் விவகாரம் தொடர்பாக 2 நாட்களுக்கு அரசியல் பேசப் போவதில்லை. நமது பாதுகாப்புக்கு எதிராக நடைபெற்ற இதுபோன்ற தாக்குதல்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டை துண்டாடுவதே இது போன்ற தீவிரவாத செயல்களின் நோக்கம். அதற்கு ஒருபோதும் நமது நாடு இரையாகாது.
ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும், நமது ராணுவ வீரர்களுக்கும், மத்திய அரசுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று ராகுல் காந்தி கூறினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி. நமது நாடு 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை இழந்து விட்டது. அவர்களை பறிகொடுத்த குடும்பத்துக்கு அனைவருக்கும் நாம் இருக்கிறோம் என்று உணர்த்தும் தருணம் இது என்றார் அவர்.