ஏப்ரல்- மே என்னங்க.. ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருக்கும்.. எச்சரிக்கும் நிபுணர்
டெல்லி: ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என்றும் அடுத்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு மேலும் உயர வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு அதிகமாகவே இருந்து வருகிறது. வெள்ளிக்கிழமை மட்டும் 6000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
சனிக்கிழமை 6,654 பேருக்கும் ஞாயிற்றுக்கிழமை 6,767 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதிர்ச்சியை அளித்தது. இதன் மூலம் மே 24 ஆம் தேதி நிலவரப்படி 1,31,868 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஹாட்ஸ்பாட் பகுதிகளில் தீவிரம் காட்டாதது ஏன்.. பொதுமக்கள் கேள்வி.. கொரோனா பிடியில் சென்னை!
பொருளாதாரம்
நாட்டில் இரு மாதங்களாக கடுமையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது 31 ஆம் தேதி வரை அந்த உத்தரவு அமலில் உள்ளது. எனினும் பொருளாதார பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது.
ஊரடங்கில் தளர்வு
கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் கொரோனா பாதிப்பு அதிகரித்த நாடுகளில் இந்தியா மட்டும் முதல் நாடு இல்லை. மார்ச் மாதம் ஈரானில் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பு ஏப்ரல் மாதம் குறைந்து ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகளே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்கள். இதையடுத்து ஏப்ரல் மாதம் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு படிப்படியாக ஊரடங்கில் தளர்வு கொடுக்கப்பட்டது.
இரட்டிப்பான பாதிப்பு
ஆனால் ஊரடங்கை தளர்த்தியதற்காக ஈரான் பெரிய விலையை கொடுத்துவிட்டது. ஆம் ஏப்ரல் இறுதியில் நாள்தோறும் 1000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஊரடங்கு உத்தரவை தளர்த்தியதன் விளைவு மே மாதம் கொரோனா பாதிப்பு இரட்டிப்பானதில் தெரியவந்தது. தற்போது அந்த நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசுகிறது.
கொரோனா பாதிப்பு
அது போல் முதலில் அதிகமாக கொரோனா பாதிப்பை சந்தித்த ஐரோப்பிய நாடுகளும் ஊரடங்கை தளர்த்தியவுடன் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் இருந்தது தெரியவந்தது. சீனாவின் வுகானில் கூட கொரோனா பாதிப்பு இல்லை என்றவுடன் ஊரடங்கில் தளர்வுகள் கொடுக்கப்பட்டது. ஆனால் சில வாரங்களில் முதல் முறையாக மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
தென்கொரியா
இதே போல் தென்கொரியாவில் கிளப்புகள் மற்றும் பார்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியவுடன் அங்கு புதிய கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ளன. இரு மாதங்கள் ஊரடங்கிற்கு பின்னர் கொரோனா பாதிப்பில் இந்தியா அதிவேக வளர்ச்சிப் பாதையில் செல்கிறது.
தளர்வு
இதுகுறித்து தொற்றுநோய் துறை நிபுணர் தன்மே மஹாபத்ரா கூறுகையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. மாநிலங்களுக்கிடையே கொரோனா சோதனை நிலையில் மாறுபட்ட தன்மை உள்ளிட்டவைகளால் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ஊரடங்கு தளர்வை படிப்படியாக அமல்படுத்தியிருக்கலாம்.
அதிகரிப்பு
இந்தியா போன்ற நாட்டை தொடர்ந்து பொது முடக்கத்தில் வைத்திருக்க முடியாது. அதற்காக எங்கு வேண்டுமானாலும் பொதுமக்கள் பயணம் செய்யலாம் என விட்டுவிடுவது என்ற அர்த்தம் இல்லை. கன்டெய்ன்மென்ட் ஜோன்களில் ரேண்டமாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். ஊரடங்கை தளர்த்தியதால் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகரித்துவிட்டது என சொல்லமுடியாது.
ஜூலை மாதம்
சில தளர்வுகளால் இன்னும் வரும் வாரங்களில் அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 10ஆவது இடத்தில் உள்ளது. இதன் மூலம் நம் நாட்டில் கொரோனா பாதிப்பு குறையவில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. ஏப்ரல், மே மாதத்தை காட்டிலும் ஜூன் மாதம் கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருக்கும். அதைவிட ஜூலை மாதம் இன்னும் அதிகமாகவே இருக்கும் என மஹாபத்ரா தெரிவித்தார்.