கொரோனா காலத்திலும் தேர்தல் நடத்தி அசத்தல்.. தேர்தல் ஆணையத்திற்கு குடியரசு தலைவர் பாராட்டு!
டெல்லி: கொரோனா காலத்திலும் சிறப்பாக தேர்தல் நடத்தியுள்ள இந்திய தேர்தல் ஆணையத்தை உலகமே வியந்து பார்க்கிறது என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி, தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1950ம் ஆண்டு, இந்தியாவில், தேர்தல் ஆணையம் இந்த நாளில்தான் துவங்கப்பட்டது. இன்று 11வது ஆண்டு தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.
வாக்காளர்களை அதிக அளவுக்கு ஓட்டு போட வைப்பதற்கு செய்ய வேண்டிய விழிப்புணர்வு, பிரச்சாரங்கள் உள்ளிட்டவை பற்றி இந்த நாளில் நினைவுகூரப்படும். மேலும், ஊக்கம் வழங்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.
இதையொட்டி, இன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் செய்து வரும் அளப்பரிய பங்களிப்புக்கு பாராட்டு தெரிவிக்கும் நாளாக இதை நான் பார்க்கிறேன். வாக்காளர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்வது.. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நாளாக இதை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
President of India, Ram Nath Kovind, virtually addressed the 11th National Voters’ Day Celebrations, organised by the Election Commission of India today
— ANI (@ANI) January 25, 2021
"After being inspired by successful election process in India, many countries showed interest in researching on it," he said. pic.twitter.com/yrzUpqKt5d
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தலைமை தேர்தல் ஆணையம் டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியை காணொலி காட்சி வாயிலாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று துவங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், கொரோனா நோய் பரவல் காலத்திலும் அமைதியான மற்றும் பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்தி உலக நாடுகளுக்கு முன்னால் இந்தியாவை தலை நிமிர்ந்து நிற்கச் செய்துள்ளது நமது தேர்தல் ஆணையம்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் சாதனையைப் பார்த்து வியந்து போன பிறநாட்டு தேர்தல் ஆணையர்கள் இந்த நடைமுறையை ஆய்வு செய்து வருகின்றனர். அதை தங்கள் நாட்டில் பயன்படுத்த நமது தேர்தல் ஆணையத்திடம் விவரம் கேட்டு வருகின்றனர்.
இந்தியாவில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. எனவே தான், உலக தேர்தல் அமைப்புகளில் தலைவராக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று பாராட்டு தெரிவித்தார்.