அயோத்தி.. 3 முக்கியமான நபர்கள் சமரசம் செய்தும் முடியவில்லை.. இனி வழக்கில் என்ன நடக்கும்?
Recommended Video
டெல்லி: அயோத்தி வழக்கை சமரசம் மூலம் முடித்து வைக்க உச்ச நீதிமன்றம் செய்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் அயோத்தி வழக்கு மீண்டும் முதலில் இருந்து சர்ச்சையாக மாறியுள்ளது.
அயோத்தி வழக்கில் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த சமரசம் தோல்வியில் முடிந்துள்ளது. சமரச முயற்சி தோல்வி அடைந்துவிட்டதாக மூவர் குழு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தை இந்த அறிவிப்பு அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மூன்று பேரும் முக்கியம்
இந்த வழக்கில் சமரசம் செய்ய தேர்வு செய்யப்பட்ட மூன்று பேருமே முக்கியமான நபர்கள். இந்த குழுவின் தலைவர் முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா, 2011-2012 இடையே உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். இவர் சென்னை ஹைகோர்ட்டில் நீதிபதியாக இருந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் ஹைகோர்ட்டில் தலைமை நீதிபதியாக இருந்துள்ளார். இவருக்கு இந்து இஸ்லாமிய பிரச்சனை குறித்த கூர்ந்த அறிவு உள்ளது குறிப்பிடத்தக்கது .
இன்னொருவர்
அதேபோல் இந்த குழுவில் இடம்பெற்று இருந்த இன்னொரு நபரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தமிழகத்தை சேர்ந்தவர். இவர் ஏற்கனவே இந்த அயோத்தி பிரச்சனையில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார். அங்கு ராமர் கோவில் கட்ட ஆதரவாக இவர் பலமுறை பேசியுள்ளார். இந்த குழுவில் இவர் மிக முக்கியமான நபராக பார்க்கப்பட்டார்.
மிக முக்கியம்
இது இல்லாமல் குழுவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு இதற்கு முன் பல மத்தியஸம் பேசும் வழக்குகளில் கலந்து கொண்டு மத்தியஸம் பேசி இருக்கிறார். இதற்காக இவர் மத்தியஸம் பேசும் அமைப்பு ஒன்றையும் உருவாக்கி உள்ளார். இந்தியாவில் நீதிமன்றத்துடன் இணைக்கப்பட்ட முதல் மத்தியஸம் பேசும் அமைப்பை உருவாக்கியது இவர்தான். மிகவும் சிக்கலான வழக்குகளில் இவர் மத்தியஸம் பேசி இருக்கிறார்.
இல்லை
இப்படி மூன்று முக்கியமான நபர்கள் கிட்டத்தட்ட 3 மாதம் சமரசம் பேசியும் கூட இந்த வழக்கில் யாரும் சமரசம் ஆகவில்லை. இதுதான் உச்ச நீதிமன்றத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.முக்கியமான சில அமைப்புகள் இந்த வழக்கில் சமரசம் செய்துகொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுதான் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய முக்கிய காரணமாக மாறியுள்ளது.
எத்தனை வருடம்
1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்து பிடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சனைதான் இந்த முக்கிய வழக்கிற்கு காரணம் ஆகும். 27 வருடமாக இந்த பிரச்சனை நீடித்து வருகிறது. தற்போது சமரச முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.
முதலில் இருந்து
இதனால் எப்போதும் போல வழக்கு மீண்டும் 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வால் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது. சரியாக குறிப்பிட வேண்டும் என்றால் அயோத்தி வழக்கு தொடங்கிய இடத்தில் இருந்தே மீண்டும் ஆரம்பித்துள்ளது.இதில் எல்லா தரப்பும் விசாரிக்கப்பட்டு, மீண்டும் இதில் விசாரணை நடந்து பின் தீர்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.