பாபர் மசூதி இடிப்பில் சதி திட்டம் இல்லை.. தலைவர்கள் தடுக்கத்தான் முயன்றனர்.. தீர்ப்பு கூறுவது என்ன?
டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்துள்ளது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.
இவர்கள் முன்கூட்டியே சதித்திட்டம் தீட்டி பாபர் மசூதியை இடித்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு இன்று... அத்வானி குற்றவாளி எனில் 5 ஆண்டு சிறை தண்டனையாம்!
முக்கிய தலைவர்கள்
கரசேவகர்களை தூண்டி விட்டதாகவும், மசூதி இடிப்பு பின்னணியில் சதி செய்ததாகவும் 32 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு லக்னோ, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. பாஜக மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் உள்ளிட்டோரும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களில் அடங்குவர்.
அத்வானி மீது குற்றச்சாட்டு
அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்று நாடு முழுக்க ரத யாத்திரை சென்றவர் அத்வானி. மேலும் பாபர் மசூதி இடிக்கப்படும் முன்பாக அத்வானி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளான அனைவரும் மசூதியை இடிக்கும் வகையில் கரசேவகர்கள் முன்னிலையில் எழுச்சி உரையாற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது.
ஆதாரம் இல்லை
இத்தனை ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்ற நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்கே.யாதவ், இன்று தனது தீர்ப்பை வழங்கினார். அந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று சுட்டிக்காட்டிய நீதிபதி, அனைவரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.
சதி இல்லை
பாபர் மசூதியை இடிக்க திட்டமிட்டு சதி செய்து விட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இந்த தலைவர்கள் பாபர் மசூதி இடிக்கப்படும் போது அதை செய்த சமூக விரோதிகளை தடுப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். ஆனால் இவர்கள் பேச்சை கேட்காமல் அவர்கள் மசூதியை இடித்து உள்ளனர்.
மசூதியை உடைக்க விரும்பவில்லை
சர்ச்சைக்குரிய பகுதியில் பின்பக்கத்திலிருந்து கற்கள் வீசப்பட்டுள்ளன. பாபர் மசூதி இடிக்கப் படக்கூடாது என்று அசோக் சிங்கால் விரும்பியுள்ளார். ஏனெனில் அங்கு இந்து மத கடவுள் சிலைகள் இருப்பதாகவும் எனவே அதற்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்றும் அசோக் சிங்கால் கூறியுள்ளார். எனவே கூட்டத்தினரை தடுப்பதற்கு இவர்கள் முயற்சி செய்துள்ள நிலையில் இவர்களை குற்றவாளியாக கருதமுடியாது. இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.