மீடியாக்களிடம் கவனம் தேவை... மகனுக்கு ப.சிதம்பரம் அறிவுரை
டெல்லி: தனது கைது தொடர்பாக ஊடகங்களிடம் பேட்டியளிக்கும் போது எச்சரிக்கையுடனும், கவனமுடனும் பேச வேண்டும் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்திக்கு அறிவுரை கூறினாராம்.
ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி திஹார் சிறை எண் 7-ல் உள்ளார். நேற்றுடன் நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில், அவருக்கு அக்டோபர் 3-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு தரப்பட்டுள்ளது. 75 வயதை எட்டிவிட்டதால் பல்வேறு உடல் உபாதைகளால் சிறையில் அவர் சிரமப்படுவதாக கூறப்படுகிறது.
முயற்சி
இந்நிலையில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது முதல் டெல்லியிலேயே முகாமிட்டு தந்தையை வெளியே கொண்டுவருவதற்கான ஆகச்சிறந்த அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் கார்த்தி சிதமபரம். தந்தை மீதான் வழக்கு குறித்து ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணி நேரமாவது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்கிறாராம். மேலும், தந்தையை அவ்வப்போது சிறைக்கு சென்று சந்திக்கிறார்.
தைரியம் அளித்த காங்.
குலாம் நபி ஆசாத், அகமது படேல் போன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிதம்பரத்தை சந்தித்து பேசிய போது, உங்களுடன் காங்கிரஸ் துணை நிற்கும் என சோனியா கூறச்சொன்னார் எனக் தெரிவித்தார்களாம். அதைக்கேட்டு தனக்கே உரித்த பாணியில் புன்னகையை பதிலாக அளித்தாரம் ப.சிதம்பரம் .
கவனம்தேவை
இதனிடையே, கார்த்தி சிதம்பரம் தனது தந்தை கைது தொடர்பாக ஏறத்தாழ உள்ளூர் முதல் உலக மீடியாக்கள் வரை பேட்டி அளித்து வருகிறார். இது சிதம்பரத்தின் கவனத்துக்கு சென்றதை அடுத்து, மிடியாக்களிடம் கவனமாக பேச வேண்டும் என்றும், எச்சரிக்கையுடன் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் மகனுக்கு அறிவுரை கூறினாராம் ப.சிதம்பரம்.