திமுக எம்பிக்களை அவமதிப்பு செய்ததாக புகார்.. தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ஆஜராகி விளக்கம்!
டெல்லி: திமுக எம்.பி.க்களை அவமதிப்பு செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் தமிழக முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம் நாடாளுமன்ற உரிமை குழு தலைவர் சுனில் குமார் சிங் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா சமயத்தில் "ஒன்றிணைவோம் வா" எனும் திட்டத்தின் மூலம் தி.மு.க தரப்பில் தமிழகம் முழுவதிலுமிருந்து மக்களிடம் பெற்ற 1 லட்சம் மனுக்களை அப்போதைய தமிழக தலைமை செயலாளர் சண்முகத்திடம் ஒப்படைக்க திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு மற்றும் எம்.பிகள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் நேரில் சென்றனர்.
அப்போது, எம்.பி-க்களை அமர கூட சொல்லவில்லை எனவும், அவமதிக்கும் வகையில் நடந்ததாகவும், ஒப்படைக்கப்பட்ட மனுக்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்? என கேள்வி எழுப்பட்டபோது 'எப்போது நடவடிக்கை என்பதை கூறமுடியாது' என தலைமை செயலாளர் கனத்த குரலில் கூறியதாகவும் திமுக எம்.பி-கள் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், இதற்கு தலைமை செயலாளர் சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இல்லையென்றால் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்வோம் என தி.மு.க எம்.பி-கள் கூறி இருந்தனர். ஆனால், அப்போதைய தலைமை செயலாளரான சண்முகம் அவமதிப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு விளக்கம் மட்டுமே அளித்த நிலையில் அவற்றிக்கு மன்னிப்பு கேட்காத காரணத்தினால், இந்த விவகாரத்தை நாடாளுமன்ற தலைவரிடம் தி.மு.க எம்.பி-க்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து இது தொடர்பாக நாடாளுமன்ற உரிமை குழுவு விசாரிக்க பரிசீலனை செய்யப்பட்டதையடுத்து நாடாளுமன்ற உரிமை குழுவிடம் எம்.பி-க்கள் நேரில் ஆஜராகி இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்தனர். அதன் பின்னர் அவற்றை விசாரணைக்கு ஏற்று கொண்ட உரிமை குழு, இன்றைய தினம் (செப்டம்பர் 23, 2021 ) முன்னாள் தலைமை செயலாளர் சண்முகத்தை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்முறையாக டெல்லி பயணம்.. 2 நாளில் நடக்க போகும் 3 முக்கிய சந்திப்புகள்
இதனைத் தொடர்ந்து, டெல்லி வந்த முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம் நாடாளுமன்ற வளாகத்தில் உரிமை குழு தலைவர் சுனில் குமார் சிங் முன்பு ஆஜராகி, திமுக எம்பிகளை அவமரியாதையாக நடத்தப்பட்டதாக கூறப்படும் புகார் தொடர்பாக அன்றைய தினம் என்ன நடந்து என்பது தொடர்பாக முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம் விளக்கம் அளித்தார் என தகவல்கள் தெரிவிக்கிறது.