வரலாற்று தவறை சரி செஞ்சுட்டீங்க.. தைரியமான முடிவு.. மோடிக்கு சுஷ்மா, அருண் ஜெட்லி பாராட்டு
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பின் 370வது பிரிவினை நீக்கிய பிரதமர் மோடியின் செயலுக்கு முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பின் 370வது பிரிவு நீக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அத்தோடு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் அறிவித்தார்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை பாஜக எம்பிக்கள் மற்றும் பாஜக தலைவர்கள் கொண்டாடி வருகிறார்கள். வரலாற்று சிறப்பு மிக்க நாள் என மகிழ்ந்து வருகிறார்கள். இந்த மசோதாவுக்கு சில எதிர்க்கட்சிகள் பாராட்டும் தெரிவித்துள்ளன. தைரியமான முடிவு என புகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "தைரியமான மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க முடிவு. எங்களின் சிறந்த இந்தியாவுக்கு, ஒற்றை இந்தியாவுக்கு நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம்" என தெரிவித்துள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஒரு வரலாற்று தவறு சரி செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 368 வது பிரிவின் கீழ் நடைமுறையைப் பின்பற்றாமல் 35 ஏ பிரிவு பின் கதவு வழியாக வந்தது. அது செல்ல வேண்டியதுதான். வரலாற்று தவறுகளை சரி செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமித் ஷா ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" இவ்வாறு கூறியுள்ளார்.