நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட தயாராகும் திஹார் சிறை- துக்கிலிடும் ஊழியர் வருகை- நாளை ஒத்திகை!
டெல்லி: நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 20-ந் தேதி தூக்கிலிடுவதற்கு டெல்லி திஹார் சிறை தயாராகி வருகிறது. 4 பேரையும் தூக்கிலிடும் ஊழியர் பவான் ஜல்லாத் திஹார் சிறைக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறார். நாளை சிறையில் ஒத்திகை நடைபெற உள்ளது.
நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனை நிறைவேற்றம் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. பல்வேறு சட்ட காரணங்களை முன்வைத்து 4 பேரும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு தடை பெற்று வருகின்றனர்.
இன்னொருபக்கம் நிர்பயாவின் தாயார் உள்ளிட்டோர் குற்றவாளிகளை தூக்கிலிடும் வரை ஓய்வதில்லை என கூறி வருகின்றனர். இந்த நிலையில் குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவண் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார்சிங் ஆகியோருக்கு வரும் 20-ந் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இவர்களைத் தூக்கிலிடுவதற்காக சிந்தி ராம் என்ற பவான் ஜல்லாத் திஹார் சிறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். டெல்லி திஹார் சிறையில் நாளை சிந்தி ராம், 4 பேரையும் தூக்கிலிடுவதற்கான ஒத்திகையை மேற்கொள்ள இருக்கிறார்.
பவன் ஜல்லாத் குடும்பத்தினர் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தே தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஊழியர்களாக பணியாற்றினர். தற்போது பவான் ஹல்லாத், 4-வது தலைமுறையைச் சேர்ந்தவர். தற்போதும் கூட நிர்பயா கொலை குற்றவாளிகள் தங்களுக்கான தூக்கு தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தை அணுகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அக்ஷய் குமார் மீண்டும் கருணை மனு
இதனிடையே நிர்பயா கொலை குற்றவாளி அக்ஷ்யகுமார் 2-வது முறையாக கருணை மனுவை அனுப்பியுள்ளார். இம்மனுவை டெல்லி அரசு, உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க இருக்கிறது.