கருத்து கணிப்பெல்லாம் பொய்.. ஆஸ்திரேலியாவில் நடத்திய கணிப்புகள் என்னவாயிற்று.. சசி தரூர்
டெல்லி: கருத்து கணிப்புகள் பொய்யானவை என நான் நம்புகிறேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நேற்றுடன் தேர்தல்கள் நடந்து முடிந்தன. சுமார் 542 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்றைய தினம் வெளியானது.
இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறுவது என்னவென்றால், பாஜக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு பலத்த அடி காத்திருக்கிறது என்றும் அவை தெரிவித்தன.
இந்த கருத்து கணிப்புகளை ஒரு சாரார் ஆஹா ஓஹோ என பாராட்டியும் மற்றொரு சாரார் பொய்யானவை என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்பி தொகுதி வேட்பாளருமான சசி தரூரும் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்.
அவர் கூறுகையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் பொய்யானவை என நான் நம்புகிறேன். ஆஸ்திரேலியாவில் கடந்த வார இறுதியில் எடுக்கப்பட்ட பல்வேறு தேர்தலுக்கு பிந்தைய கருத்துகள் 56-ம் பொய்யானது.
I believe the exit polls are all wrong. In Australia last weekend, 56 different exit polls proved wrong. In India many people don’t tell pollsters the truth fearing they might be from the Government. Will wait till 23rd for the real results.
— Shashi Tharoor (@ShashiTharoor) May 19, 2019
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கருத்து கணிப்பாளர்களிடம் உண்மையை சொல்ல மாட்டார்கள். உண்மையான தேர்தல் முடிவுகள் வரும் 23-ஆம் தேதி வருகிறது. அதுவரை பொறுத்திருப்போம் என்றார். ஆஸ்திரேலியா கருத்து கணிப்புகள் பொய்யானது என சசி தரூர் எதை கூறுகிறார் என்றால், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனின் கட்சி படுதோல்வி அடையும் என கருத்து கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் அவரது கட்சியோ எதிர்பாராத அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது.