மத்திய பட்ஜெட் 2021 : ஊரெல்லாம் எதிர்பார்ப்பு.. யார் யாருக்கு என்ன விருப்பம்?
புதுடெல்லி : 2021-2022 ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தொடர்பாக பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கும், பலவிதமான எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. அதிலும் கொரோனா ஊடரங்கிற்கு பிறகு தாக்கல் செய்யப்பட முதல்
பட்ஜெட் இது என்பதால் அனைவரின் கவனத்தையும் இது கூடுதலாக ஈர்த்துள்ளது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 29 ம் தேதி துவங்க உள்ளது. இரண்டு பகுதிகளாக இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. முதல் பகுதி ஜனவரி 29 துவங்கி, பிப்ரவரி 15 வரையிலும், இரண்டாவது பகுதி மார்ச் 8 துவங்கி, ஏப்ரல் 8 வரையிலும் நடைபெற உள்ளது. கேள்வி நேரம், கேள்வி இல்லாத நேரம் ஆகியனவும் இதில் அடங்கும்.
பார்லிமென்ட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கூட்டத்தொடரின் முதல் பகுதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் உரையுடன் துவங்க உள்ளது. பார்லிமென்ட் கூட்டுக்குழுவில் அவர் உரையாற்றிய பிறகு, கடந்த நிதி ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
ஆர்வத்தை தூண்டும் பட்ஜெட் :
மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 3 வது மத்திய பட்ஜெட் இதுவாகும். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தாக்கல் ஆகும் முதல் பட்ஜெட், முதல் பொருளாதார ஆய்வறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். பொதுவாக பொருளாதார ஆய்வறிக்கையில், கடந்த பட்ஜெட்டில் அரசு அறிவித்த திட்டங்கள், அவற்றிற்காக ஒதுக்கப்பட்ட தொகை ஆகியன செயல்படுத்தப்பட்டது பற்றி விபரங்கள் அடங்கி இருக்கும். இந்த முறை கொரோனா காரணமாக பொருளாதாரத்தில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்ற விபரமும் இடம்பெறும் என கூறப்படுகிறது.
கொரோனாவால் சரிந்த ஜிடிபி :
கொரோனா பரவல், கட்டுப்பாடுகள், முழு ஊரடங்கு ஆகியவற்றால் பல நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர். இதனால் அரசின் வரிவசூல் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2020 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் ஜிடிபி எனப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தி 23.9 சதவீதம் சரிந்தது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 7.5 சதவீதம் மீண்டும் குறைந்தது.
எப்போது சரியாகும் :
பொதுவாக ஏப்ரல்-ஜூன், ஜூலை-செப்டம்பர் காலாண்டுகளில் தான் ஜிடிபி உயர்வாக காணப்படும். ஆனால் இம்முறை அந்த காலாண்டுகளில் தான் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த இழப்பீட்டின் தாக்கம் சரியாக இன்னும் எத்தனை மாதங்கள் ஆகும். பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்ப பல ஆண்டுகள் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பல்வேறு நெருக்கடிக்களுக்கு இடையே தாக்கல் செய்யப்பட உள்ளதால் அனைவரின் கவனத்தையும் இந்த பட்ஜெட் ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம்.
யாருக்கு, என்ன எதிர்பார்ப்பு :
வேளாண் துறை - 2022 ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வேளாண் உற்பத்தி கடன்கள் இலக்கை உயர்த்தி வருகிறது. இதனால் இந்த முறையும் வேளாண் உற்பத்தி கடன் இலக்கு ரூ.15 லட்சம் கோடியில் இருந்து, ரூ.19 லட்சம் கோடியாக உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே போல் 2016-17 ம் நிதியாண்டை போல் இந்த பட்ஜெட்டிலும் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
பெண் முதலீட்டாளர்கள்:
பெண் முதலீட்டாளர்கள் - ஒரே வேலைக்கு ஆண் ஊழியர்களுக்கு ரூ.100 ஊதியமும், பெண் ஊழியர்களுக்கு ரூ.75 என்ற நிலையும் இருந்து வருகிறது. இதனை மாற்றி அமைத்தால் பெண்களி நிதி முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்கள் தனித்துவத்தோடு வாழ வழிவகை செய்யும் விதமாக தனியான வரி செலுத்தும் முறைகளை கொண்டு வரலாம். வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்பன போன்ற எதிர்பார்ப்புக்களும் எழுந்துள்ளது.
சுகாதாரத்துறை:
சுகாதாரத்துறை - பொதுவாக மற்ற துறைகளுடன் ஒப்பிடும் போது சுகாதாரத்துறைக்கு குறைவான தொகையே ஒதுக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு ரூ.67,112 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 10,000 பேருக்கு 5.5 படுக்கை வசதிகள் என்ற நிலையே இருந்து வருகிறது. கொரோனா போன்ற கொடிய நோய்கள் பரவி வரும் காலம் என்பதால் சுகாதாரத்துறையின் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பிற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என அந்த துறை சார்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள்:
சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் - கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்துள்ள துறைகளில் முக்கியமானது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் தான். இவற்றை ஊக்குவிக்கும் விதமாக ஜிஎஸ்டி.,யை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கலாம். எளிதில் வங்கிக் கடன் பெற திட்டங்கள் கொண்டு வரலாம் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில் துவங்குவதற்கான அடிப்படை விதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரவும் கேட்கப்பட்டுள்ளது.
பங்குச்சந்தை எதிர்பார்ப்புகள் :
கடந்த 10 ஆண்டுகளின் புள்ளிவிபரத்தை பார்த்தால், இந்த காலகட்டங்களில் தாக்கல் செய்யப்பட்ட 10 ல் 6 பட்ஜெட் தாக்கல் நாளன்று இந்திய பங்குச்சந்தைகள் நாள் முழுவதும் கடும் சரிவுடனேயே காணப்பட்டுள்ளன. இம்முறை இந்த நிலையை மாற்ற சுகாதாரத்துறை, உள்கட்டமைப்பு, நிதித்துறை, வங்கித்துறை துறைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இந்த துறைகளில் முதலீடுகளை அதிகரிக்கச் செய்யும் திட்டங்களை கொண்டு வந்தால், பங்குச்சந்தைகள் ஏற்றம் பெற வழிவகுக்கும் என அரசுக்கு சந்தை நிபுணர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.