கோவாக்சின் பாதுகாப்பானதா? 3-ம் கட்ட பரிசோதனை முடிவுகள் எங்கே? கேள்வி எழுப்பும் மருத்துவ நிபுணர்கள்
டெல்லி: கொரோனாவை கட்டுப்படுத்த கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஆனால் மத்திய அரசு அனுமதித்துள்ள கோவாக்சின் பாதுகாப்பானதா? அதன் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் ஏன் வெளியிடப்படவில்லை என மருத்துவ நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
உலகம் முழுவதும் தொடர்ந்து கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் 4 வகை கொரோனா வைரஸ்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளன.
அதேநேரத்தில் கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போடுவதிலும் உலக நாடுகள் தீவிரமாக உள்ளன. இந்தியாவிலும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஆனால் மத்திய அரசின் இந்த முடிவு அவசரகதியில் எடுக்கப்பட்டது என மருத்துவ நிபுணர்கள் விமர்சிக்கின்றனர்.
மத்திய அமைச்சர் சதானந்த கவுடா திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
3-ம் கட்ட சோதனை முடிவு எங்கே?
அனைத்திந்திய மருந்து செயல்பாட்டு நெட்வொர்க் அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கோவாக்சின் தடுப்பூசியானது மனிதர்களுக்கு 3 கட்டமாக செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதில் 2 கட்ட பரிசோதனை முடிவுகள்தான் வந்துள்ளன. நவம்பரில் நடத்தப்பட்ட 3-ம் கட்ட பரிசோதனை முடிவுகள் என்ன ஆனது? அது ஏன் வெளியிடப்படவில்லை? அதுவெளியிடப்படாத நிலையில் தடுப்பூசியை பொதுமக்கள் போட்டுக் கொள்ள பரிந்துரைப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது.
சர்வதேச பாதிப்பு
இதேகேள்வியை மருத்துவ நிபுணர்கள் பலரும் எழுப்பியுள்ளனர். கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் அவசரகாலத்துக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது; ஆனாலும் சர்வதேச சந்தைக்கும் இது செல்ல இருக்கிறது. அப்படியான நிலையில் கோவாக்சின் முழுமையான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது என்பதற்கான தரவுகள் அல்லது ஆய்வு முடிவுகள் என்ன இருக்கிறது? இதை வெளியிடாமல் சர்வதேச சந்தைக்கு சென்றால் தயாரிப்பு நிறுவனங்கள்தான் பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
சரியான முறை அல்ல
மேலும், சீரம் நிறுவனமானது 50 மில்லியன் டோஸ்கள் கையிருப்பில் இருக்கிறது என கூறுகிறது. ஆனால் பாரத் பயோடெக் நிறுவனமானது இத்தகைய விவரங்கள் எதனையும் வெளிப்படுத்தவும் இல்லை. 3-வது கட்ட கோவாக்சின் பரிசோதனை முடிவுகள் என்ன என பார்த்துவிட்டு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருந்தால் சரியானதாக இருக்கும் என்பதும் மருத்துவ நிபுணர்களின் கருத்தாகும்.
கேள்விக்குறியாகும் நம்பகத்தன்மை
அதேபோல், கொரோனாவுக்கான தடுப்பூசி போடுவதால் தனிநபர்களுக்கு ஆபத்து வரும் என கூறவில்லை. இதுபோன்ற விவகாரங்களில் உரிய நெறிமுறைகளைப் பின்பற்றியிருக்க வேண்டும். அப்படி செய்யாமல் அவசர கதியில் அனுமதி கொடுத்தால் தடுப்பூசிகள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும் என்கின்றனர் மருத்துவ துறை வல்லுநர்கள்.