புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருட்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தேன்.. பயங்கரவாதி தகவல்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டிற்கான வெடிமருந்துகள் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் தற்கொலை தாக்குதலை நடத்தினார். இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை நேற்று இரவு தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள ஹஜிபல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாகிர் பஷீர் மாக்ரே (22). இவர் புல்வாமா தாக்குதலை நடத்திய அடில் அகமது தாருக்கு மாக்ரே அடைக்கலம் கொடுத்துள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி புல்வாமா தாக்குதல் நடத்தப்படும் வரை அடில், உமர் ஃபரூக் ஆகியோரை மாக்ரே தனது வீட்டில் வைத்துள்ளார். அவர்கள் வெடிகுண்டு தயாரிப்பதற்கும் உதவியுள்ளது தெரியவந்துள்ளது.
மாக்ரேவை என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டனர். புல்வாமா தாக்குதல் குறித்து மாக்ரே போலீஸாரிடம் கூறுகையில் தாக்குதல் நடத்துவதற்காக காரை நான்தான் ஓட்டிச் சென்றேன். பின்னர் சம்பவம் நிகழ்ந்த 500 மீட்டருக்கு முன்பிருந்து தார் காரை ஓட்டினார். அவர் ராணுவ வாகனத்தில் மோதி தற்கொலை படை தாக்குதலை நிகழ்த்தினார்.
தாருக்கு வெடிகுண்டு தயார் செய்ய உதவினேன். என் வீட்டில் அடைக்கலம் கொடுத்தேன். புல்வாமா தாக்குதலுக்குத் தேவையான வெடிப்பொருள் தயார் செய்ய அம்மோனியம் நைட்ரேட் மற்றும் பேட்டரி ஆகியவை ஆன்லைனில் ஆர்டர் செய்தேன் என தெரிவித்துள்ளார். தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட 80 கிலோ ஆர்டிஎக்ஸ் பாகிஸ்தானிலிருந்து எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி வழியாக வந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.